UPDATED : ஜன 13, 2024 12:00 AM
ADDED : ஜன 13, 2024 04:48 PM
வால்பாறை:
வால்பாறையில், தேயிலை தொழிலுக்கு மாற்றுத்தொழில் இல்லாததால், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வெளியூர்களுக்கு செல்கின்றனர்.இந்நிலையில், கோவை பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் கோவை ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இணைந்து, தேயிலை அல்லாத மாற்றுத்தொழில் உருவாக்கும் வகையில் வால்பாறை நகரில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் துவக்கியது.இதன் துவக்க விழாவுக்கு வால்பாறை பால் உற்பத்தியாளர் நல சங்க செயலாளர் பொன்காமராஜ் தலைமை வகித்தார். கோவை மாவட்ட ஆவின் பால் விற்பனை பிரிவு பொதுமேலாளர் பாலபூபதி, துணை பொதுமேலாளர் தனபால், கூட்டுறவு சார் பதிவாளர் சபரிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டு, பால் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தனர்.அதிகாரிகள் பேசுகையில், வால்பாறை நகரில் தேயிலை அல்லாத மாற்றுத்தொழில் உருவாக்கும் வகையிலும், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும், ஆவின் பால் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.பால் விற்பனையாளர்களுக்கு, அவர்களுக்கான தொகையை வங்கி கணக்கில் செலுத்தப்படும். அரசு நிர்ணயித்துள்ள விலையில் பால் பெறப்படும். மாடு வளர்ப்போருக்கு, 80 ஆயிரம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்றனர்.