கிறுக்கலாக எழுதக் கூடாது: டாக்டர்களுக்கு புது உத்தரவு
கிறுக்கலாக எழுதக் கூடாது: டாக்டர்களுக்கு புது உத்தரவு
UPDATED : ஜன 15, 2024 12:00 AM
ADDED : ஜன 15, 2024 11:24 AM
புவனேஸ்வர்:
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் ஒரு வழக்கு விசார ணையின்போது, ஒடிசா உயர் நீதிமன்றம், மாநில தலைமைச் செயலருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது.உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
பிரேத பரிசோதனை உள்ளிட்ட சட்டத்துக்குட்பட்ட மருத்துவ அறிக்கைகள், படிக்க முடியாத அளவுக்கு கையெழுத்து மிகவும் மோசமாக உள்ளன. இதனால், தவறாக புரிந்து கொள்ளும் அபாயமும் உள்ளது. இது, வழக்கின் போக்கை மாற்றிவிடும்.கிறுக்கலாக எழுதுவது என்பது டாக்டர்களின் அடையாளமாக மாறியுள்ளது. அதனால் தெளிவான வகையில் எழுதும்படி தலைமைச் செயலர் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, தலைமைச் செயலர் பிரதீப் குமார் ஜெனா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நோயாளிகளுக்கு வழங்கும், பிரிஸ்கிரிப்ஷன் எனப்படும் மருத்துவக் குறிப்பு உள்ளிட்டவை, தெளிவான கையெழுத்தில் இருக்க வேண்டும். முடிந்தவரை அச்சடித்து வழங்கலாம்.வழக்குகள் தொடர்பான மருத்துவ ஆவணங்கள் உட்பட, டாக்டர்கள் வழங்கும் அனைத்து ஆவணங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.