பொது தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவு: இம்முறை தனி கவனம் செலுத்த கலெக்டர் அறிவுரை
பொது தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவு: இம்முறை தனி கவனம் செலுத்த கலெக்டர் அறிவுரை
UPDATED : பிப் 03, 2024 12:00 AM
ADDED : பிப் 03, 2024 06:03 PM
ஊட்டி:
பொது தேர்வுகளில் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு மாநாடு நடந்தது.கலெக்டர் அருணா பேசியதாவது:
பள்ளி மேலாண்மை குழு கடந்த, 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஆய்வு சென்ற போது பள்ளி மேலாண்மை குழு உதவியோடு, நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுத்து குழந்தைகளுக்கு பாடங்கள் நடத்தி வருவது பாராட்டுக்குரியது.அதே சமயத்தில், மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவு, மாநில அளவிலான ரேங்கிலும் கடைசியாக இருப்பது வருத்தமாக உள்ளது. இந்த முறை, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தனி கவனம் செலுத்தி தேர்ச்சி விகிதம், 95 சதவீதத்திற்கு மேல் வரும் அளவுக்கு அனைவரும் உழைக்க வேண்டும்.மேலும், மாணவர்களுடைய கற்றல் சூழல்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியின் அனைத்து அம்சங்களிலும் தன்னிறைவு பெற்ற பள்ளியாக உருவெடுக்க அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், நம் மாநிலத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு முகாம் மூலம், மாநில அளவில், 70 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். உயர்கல்வி மாணவர்களின் வளர்ச்சி, 53 சதவீதமாக அதிகரித்துள்ளது, என்றார்.தொடர்ந்து, சிறந்த பள்ளி மேலாண்மை குழுவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.

