பள்ளி சீருடை நூல் கொள்முதல் டெண்டர்: டிபாசிட் ரூ.6 கோடியாக குறைக்க வலியுறுத்தல்
பள்ளி சீருடை நூல் கொள்முதல் டெண்டர்: டிபாசிட் ரூ.6 கோடியாக குறைக்க வலியுறுத்தல்
UPDATED : பிப் 16, 2024 12:00 AM
ADDED : பிப் 16, 2024 09:17 AM
ஈரோடு:
பள்ளி சீருடை திட்டத்துக்கான, நுால் கொள்முதல் டெண்டருக்கான டிபாசிட் தொகையை, 6 கோடி ரூபாயாக குறைக்க வேண்டும் என, விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுபற்றி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பு செயலர் கந்தவேல், தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் நுால் கொள்முதலில் பங்கேற்ற விரும்பும் ஒப்பந்ததாரர்கள் ஆண்டுக்கு, 30 கோடி ரூபாய் வரை வரவு, செலவு செய்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என வரையறை வைத்திருந்தனர். அப்போது எங்கள் கூட்டமைப்பு சார்பில், நிதித்துறை முதன்மை செயலருக்கு கோரிக்கை விடுத்து, 15 கோடி ரூபாய் வரை வரவு, செலவு செய்பவர்கள் கூட, நுால் கொள்முதல் டெண்டரில் டிபாசிட் செலுத்தி பங்கேற்க அனுமதி வழங்கினர். இதனால், கூடுதலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்று, நுாலுக்கான விலையை குறைத்து டெண்டர் கோரினர்.அதுபோல, தமிழக அரசின் இலவச பள்ளி சீருடை திட்டத்தில் நுால் கொள்முதல் செய்ய, ஒப்பந்ததாரர்களிடம் ஆண்டுக்கு, 30 கோடி ரூபாய் வரவு, செலவு உள்ளவர்கள் மட்டுமே ஒப்பந்தத்தில் பங்கேற்க முடியும் என்பதை குறைத்து, 6 கோடி ரூபாயாக குறைத்தால், கணிசமாக நுால் விலை குறைய வாய்ப்பாகும். இதன் மூலம் அரசுக்கு செலவு, பல கோடி ரூபாய் குறையும். மேலும், தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடை திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு நுால் மற்றும் துணிகளை டையிங், பிராசசிங், பிளீச்சிங், பினிசிங் போன்ற மேம்பாட்டு வேலைகளுக்கு டெண்டர் கோரப்படுகிறது.வரும் காலங்களில், தமிழகத்தில் உள்ள துறை சார்ந்த தொழில் செய்பவர்கள் பயன் பெறும் வகையில், எவ்வளவு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆலைகள் இருந்தால், டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற முறையை மாற்றி, மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் தகுதி சான்று பெற்றவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்ற, புதிய விதிமுறைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.இதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான டையிங் பிராசசிங், பிளீச்சிங், பினிசிங் தொழில் செய்பவர்கள் டெண்டரில் பங்கேற்க வாய்ப்பாக அமையும். மேலும், தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்குள்ள நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.