UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 09:55 AM
பெங்களூரு:
கர்நாடக கல்விக் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படும் அறிக்கையை ஆய்வு செய்தபின் மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என அறிவித்துள்ளது.உயர் கல்வி
* கர்நாடக கல்விக் கொள்கை வரைவு தயாரிக்க, மாநில கல்விக் கொள்கை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும். இதை ஆய்வு செய்து, மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும்* உயர் கல்வியில் மாணவியர் சேர்க்கையை அதிகரிக்க, அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. முந்தைய அரசில் கல்லுாரி மாணவியருக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. தற்போது மாநிலத்தின் 33 அரசு மகளிர் பி.யூ.சி., கல்லுாரிகள், அரசு மகளிர் பாலிடெக்னிக்குகளை தரம் உயர்த்த, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது* அரசு பி.யூ.சி., கல்லுாரிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, 250 கோடி ரூபாய் செலவிடப்படும். அரசு பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லுாரிகளில் அடிப்படை வசதிகள் செய்ய, 120 கோடி ரூபாய் வழங்கப்படும்* கல்யாணா கர்நாடகா வளர்ச்சி ஆணையம் சார்பில் கொப்பால், பீதர், யாத்கிர், ராய்ச்சூர், கலபுரகியில் பல்கலைக்கழகங்கள் கட்டப்படும்* விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகம் 500 கோடி ரூபாய் செலவில் ஐ.ஐ.டி., போன்று தரம் உயர்த்தப்படும். இதற்கு மாநில அரசு 100 கோடி ரூபாய் நிதி வழங்கும்* உயர் கல்வி மாணவர்கள், பேராசிரியர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு பேடென்ட் பெற தேவையான நிதியுதவி வழங்கப்படும். இதற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது* மைசூரின் மகாராணி மகளிர் அறிவியல் கல்லுாரி கட்டடம் 54 கோடி ரூபாய் செலவிலும், மகாராணி கலை மற்றும் வர்த்தக கல்லுாரி விடுதி கட்டடம் 116 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்படும்.