கிடப்பில் அரசு துவக்கப்பள்ளி கட்டட பணி வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதி
கிடப்பில் அரசு துவக்கப்பள்ளி கட்டட பணி வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதி
UPDATED : பிப் 18, 2024 12:00 AM
ADDED : பிப் 18, 2024 08:29 AM
கடம்பத்துார்:
கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட வெண்மனம்புதுார் பகுதியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வரும் இந்த பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து ஒன்றிய நிர்வாகம் தனியார் நிறுவன பங்களிப்புடன் 32 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்ட, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பூஜையுடன் பணி துவங்கியது. தற்போது, ஓராண்டாகியும் கட்டட பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதற்கு ஒன்றிய அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததே காரணமாக கூறப்படுகிறது. வரும் கல்வியாண்டிலாவது புதிய வகுப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா என மாணவ - மாணவியர்களின் பெற்றோர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.எனவே, மாவட்ட கலெக்டர் கடம்பத்துாரில் ஆய்வு செய்து, புதிய பள்ளி வகுப்பறை கட்டட பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தில், சமத்துவபுரம் சாலையை ஒட்டி, அரசு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் என ஒருங்கிணைந்த பள்ளி வளாகம் அமைந்துள்ளது. இதில், அங்கன்வாடி மையத்தில், 25 குழந்தைகள், தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஒட்டுமொத்தமாக, 250 மாணவர்களும் படித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த வளாகத்தின் தெற்கு பகுதியில் பாழடைந்து கிடந்த வகுப்பறை கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. இதனால், தெற்கு பகுதியில் சுற்றுச்சுவர் இன்றி திறந்தவெளியாக உள்ளது.சுற்றுச்சுவர் இல்லாத இந்த பகுதியில், பள்ளி வளாகத்தை ஒட்டி, நீர்வரத்து கால்வாய் அமைந்துள்ளது. இடித்து அகற்றப்பட்ட கட்டடத்திற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டப்படாத நிலையில், சுற்றுச்சுவர் கட்டப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.