UPDATED : பிப் 24, 2024 12:00 AM
ADDED : பிப் 24, 2024 08:39 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பயிலும், 42 ஆயிரம் மாணவ - மாணவியர் இந்தாண்டு பொதுத்தேர்வை 140 மையங்களில் எழுதுகின்றனர்.பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம் தேதி துவங்கி, 22ம் தேதி நிறைவு பெறுகின்றன. அதேபோல், பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 4ம் தேதி துவங்கி, 25ம் தேதி நிறைவு பெறுகின்றன.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 26ம் தேதி துவங்கி, ஏப்ரல் 8ம் தேதி நிறைவு பெறுகின்றன.பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவ - மாணவியருக்கு அந்தந்த பள்ளிகள் வாயிலாக ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என, மொத்தம், 106 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதேபோல, 184 பள்ளிகளைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவ - மாணவியர் இந்தாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.இதில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளைச் சேர்ந்த மாணவ - மாணவியருக்கு, மொத்தம் 120 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், 42,585 மாணவ, மாணவியர் பிளஸ் 2, பிளஸ் 1, மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் எழுத உள்ளனர்.பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்பு தேர்வுகளுக்கு தலா 54 மையங்களிலும், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு 66 மையங்கள் என, 120 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் ஆகிய பணியாளர்களை நியமிக்கும் பணியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கேள்வித்தாள்கள் இன்னும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரவில்லை. அதற்கான மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு அதிகாரி நாளை வருகிறார். அவர் வந்தவுடன், விடைத்தாள் மையங்கள், பறக்கும் படையினர் ஆகிய அலுவலர்களை நியமிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.