சிவகாசியில் அரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் தானம்; உறவினருக்கு கலெக்டர் பாராட்டு
சிவகாசியில் அரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் தானம்; உறவினருக்கு கலெக்டர் பாராட்டு
UPDATED : பிப் 29, 2024 12:00 AM
ADDED : பிப் 29, 2024 09:11 AM
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்காக அமெரிக்காவில் வசிக்கும் கு.மணிவண்ணன் தாய், தந்தை நினைவாக தானமாக ரூ.40 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை வழங்கினார். இதற்காக அவரது உறவினர் பரமேஸ்வரியை கலெக்டர் ஜெயசீலன் நேரில் அழைத்து பாராட்டினார். எம்.புதுப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200 மாணவர்கள் படிக்கின்றனர். 80 மாணவர்களுக்கு வகுப்பறை கட்டடம் இல்லாமல் சிரமப்பட்டனர்.இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தானம் வழங்குபவர்களை நேரடியாக சந்தித்து நிலம் கையகப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் கரூர் ரோடு ஏ.கே.எம்.ஜி.,நகர் 6வது தெருவில் வசிக்கும் மா.பா.குருசாமி- குருதேமொழி தம்பதி மகன் கு.மணிவண்ணன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தாய் தந்தை நினைவாக தனக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்காக, தமிழக கவர்னர் பெயரில் நன்கொடையாக வழங்கினார்.இதையடுத்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மணிவண்ணனின் உறவினர் பரமேஸ்வரியை நேரில் அழைத்து கலெக்டர் ஜெயசீலன் புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

