UPDATED : மார் 18, 2024 12:00 AM
ADDED : மார் 18, 2024 09:31 AM
ஆமதாபாத்:
குஜராத் பல்கலை வளாகத்தில், தொழுகை நடத்த முயன்ற இரண்டு வெளிநாட்டு மாணவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள குஜராத் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்கள் உட்பட ஏராளமானோர் படித்து வருகின்றனர். இவர்கள், பல்கலை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர்.இதில், நம் அண்டை நாடான இலங்கை மற்றும் மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நேற்று முன்தினம் பல்கலை வளாகத்தில் தொழுகை நடத்த முயன்றனர்.அப்போது பல்கலை வளாகத்தில் உள்ள விடுதிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் 25 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து, இங்கு தொழுகை நடத்தக்கூடாது என கூறி, அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு வெளிநாட்டு மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். மாணவர்களின் உடைமைகள், வாகனங்களையும் சேதப்படுத்தினர்.விடுதி நிர்வாகிகள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தாக்குதல் நடத்தியவர்களில் இதுவரை இரண்டு பேரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &'இந்த விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி குஜராத் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது&' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.