சத்திய சாய் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு
சத்திய சாய் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு
UPDATED : நவ 22, 2010 12:00 AM
ADDED : நவ 22, 2010 06:18 PM
புட்டப்பர்த்தி: சத்திய சாய் பல்கலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்று பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
சாய்பாபாவின் 85 வது பிறந்த நாளையோட்டி கடந்த 15ம் தேதி முதல் புட்டப்பர்த்தியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நவ. 22ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் சாய்பாபா மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சேவா நிறுவன பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்று, பேசியதாவது:
சாய்பாபா பெயரில் நடந்து வரும் கல்வி நிறுவனங்கள் சிறந்த முறையிலும், எளியமுறையிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஓற்றுமை, தியாகம், தன்னொழுக்கம், சுயசிந்தனை, சுயசேவை ஆகியவை அடங்கிய தரமான கல்வி மாணவர்களுக்கு இங்கு அளிக்கப்படுகிறது.
இந்த முறையை நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களும் தற்போது கடைப்பிடித்து வருகின்றனர். இதன் மூலம் மாணவர்களின் திறமை வெளிப்படுவதுடன் கல்வி சார்ந்த அறிவையும் வளர்த்துக் கொள்கின்றனர். உலக தரத்துக்கான நவீன சமுதாயத்தை படைப்பதன் மூலம் வறுமையும் ஒழிக்கப்பட்டு சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அறிவியல், கலை, தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பிரிவுகளில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு நல்ல முடிவுகளை வெளியிடுகின்றனர். ஆய்வுகளை மேம்படுத்தும் வகையிலும், நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் மனிதநேயத்தை வளர்க்க உதவ வேண்டும். இதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் மனிதநேயம் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதனை நாட்டிலுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர்களும் கடைப்பிடித்தால் நாம் எதிர்பார்க்கிற மனிதநேயத்தை நாடு முழுவதும் காணமுடியும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
விழாவில் சாய்பாபா அருளாசி வழங்கி பேசுகையில், தமயந்தி, சாவித்திரி, திரவுபதி, சீதா ஆகிய பெண்கள் தாங்கள் வாழும் போது ஒழுக்க நெறி தவறாமல் வாழ்ந்ததால் வளரும் சமுதாயம் சிறப்பாக இருந்தது. இதனால் வாழ்க்கையில் அனைவரும் ஒழுக்க நெறியை கடைப்பிடித்து வாழ்க்கையில் உயர வேண்டும். வீடுகளிலும் தம்பதியர்களிடம் ஒற்றுமையாக இருந்து ஒழுக்க நெறியை கடைப்பிடிப்பதன் மூலம் தேசிய அளவிலும் இதனை அனைவரும் கடைப்பிடிக்கலாம், என்றார்.
