சென்னை பிளஸ் 2 மாணவர்களுக்கான ‘ஜெயித்துக் காட்டுவோம்’
சென்னை பிளஸ் 2 மாணவர்களுக்கான ‘ஜெயித்துக் காட்டுவோம்’
UPDATED : நவ 26, 2010 12:00 AM
ADDED : நவ 26, 2010 04:01 PM
சென்னை: சென்னை மாநகராட்சியின், சென்னை பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான, ‘தினமலர்’ ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை பல்கலை நூற்றாண்டு அரங்கில் நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், குளிரையும் பொருட்படுத்தாமல், காலை 6 மணி முதலே பல்கலை அரங்கின் முன் குவிந்தனர். அவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய, ‘ஜெயித்துக் காட்டுவோம்’ எனும் வழிகாட்டி புத்தகம், தேர்வில் பாடவாரியாக வரும் முக்கிய வினாக்கள் குறித்த விவரங்கள் அடங்கிய, ‘ப்ளூ பிரின்ட்’ எனும் கையேடு, உடல் நல பாதுகாப்பு குறித்த, ‘ஹெல்த்’ புத்தகம், குறிப்பு எடுப்பதற்கான நோட்டு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு, 8.45 மணிக்கு அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம் இருவழிகளில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இயற்பியல், வேதியியல், ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ பாடங்களுக்கான ‘டிப்ஸ்களை’, திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கோபி ஆனந்தன், பாலசுப்பிரமணியன், ரமேஷ் ஆகியோர் வழங்கினர். கணித பாடத்திற்கு ஜமீன் தண்டலம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஸ்ரீதரன், உயிரியல் பாடத்திற்கு சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சேகர் ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்த அனைத்து மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, ‘தினமலர்’ சார்பில், மதிய உணவு வழங்கப்பட்டது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, கலைப் பிரிவு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. வணிகவியல், கணக்கு பதிவியல், ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ பாடங்களுக்கான ஆலோசனைகளை திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சீனிவாசன், ஸ்ரீராமன், ரமேஷ் ஆகியோர் வழங்கினர்.
பொருளியல் பாடத்திற்கு, முத்தையால்பேட்டை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரவியும், வணிகக்கணிதம் பாடத்திற்கு ஜமீன் தண்டலம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஸ்ரீதரனும், ‘டிப்ஸ்களை’ தந்தனர். கடந்தாண்டு சென்னை பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்ற மாணவர் பாண்டியராஜன், மூன்றாம் இடம் பிடித்த மாணவி பவித்ரா ஆகியோருக்கு, ‘தினமலர்’ ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நினைவுப் பரிசையும், அப்துல் கலாம் எழுதிய, ‘அக்னி சிறகுகள்’ நூலையும் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில், ‘தினமலர்’ ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, ‘டிவி’ நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசினர்.
