UPDATED : டிச 02, 2010 12:00 AM
ADDED : டிச 02, 2010 12:05 PM
ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் பொது பிரிவிலும் இடம்பெற முடியும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால், ஒதுக்கீட்டு பிரிவில் வரும் மாணவர், பொது பிரிவிலும் போட்டியிட்டு கல்வி நிறுவனங்களில் இடம்பெற முடியும் என்ற முக்கிய தீர்ப்பை, ஒரு மாணவர் தொடுத்த வழக்கில் டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.
தேஜ்பால் யாதவ் என்ற மாணவர், ஓ.பி.சி. பிரிவில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வை 2003 -இல் எழுதியுள்ளார். அதில் நல்ல மதிப்பெண்களை பெற்ற அவர், பொது பிரிவில் 2965 ஆம் இடத்தையும், ஓ.பி.சி. பிரிவில் 1179 ஆம் இடத்தையும் பெற்றார். ஆனால் கவுன்சிலிங்கின்போது ஓ.பி.சி. இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு விட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதேசமயம் பொதுபிரிவில் இடமிருந்தும், அவர் அந்த பிரிவுக்குள் வரமாட்டார் என்று அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஒரு நீதிபதியைக் கொண்ட அமர்வின் தீர்ப்பு இவருக்கு எதிராக கிடைக்கவே, அதை எதிர்த்து இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்விற்கு மேல்முறையீடு செய்தார்.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர், தொழில்முறை படிப்புகளில் ஒதுக்கீட்டு பிரிவில் இடங்கள் நிரப்பப்பட்டு விட்டாலும, நல்ல மதிப்பெண் பெற்ற ஒதுக்கீட்டு பிரிவு மாணவர் அவரது பிரிவில் இடம் கிடைக்காத நிலையில், பொதுப் பிரிவில் &'மெரிட்&' அடிப்படையில் இடம்பெற முடியும் என்ற தீர்ப்பை அளித்துள்ளது. இதன்மூலம் அடுத்த கல்வியாண்டில் (7 வருடம் கழித்து) தேஜ்பால் யாதவ், மருத்துவ கல்வி கற்க பொதுப்பிரிவில் இடம்பெறுகிறார்.
