யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் கிளரிகல் பணி வாய்ப்பு
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் கிளரிகல் பணி வாய்ப்பு
UPDATED : டிச 07, 2010 12:00 AM
ADDED : டிச 07, 2010 03:23 PM
மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா இந்தியப் பொதுத் துறை வங்கிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தில் கிளர்க்கம் கேஷியர் பணிஇடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் தமிழ் நாட்டில் மொத்தம் 110 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க 01.11.2010 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்ற பிரிவினருக்கு உச்ச பட்ச வயதில் சலுகைகளும், இட ஒதுக்கீடும் உள்ளன. முழு விபரங்களை அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க 01.11.2010 அன்று குறைந்த பட்சம் பிளஸ் டூ அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய பிரிவில் கம்ப்யூட்டர் பேசிக்ஸ், டாஸ், எம்.எஸ்., ஆபிஸ், இன்டர்நெட், இமெயில் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆபிஸ் ஆட்டோமேஷன் படிப்பைப் படித்திருப்பது கூடுதல் தேவையாகும். டிகிரி அளவிலான படிப்பில் கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்புகளைப் படித்தவர்களுக்கு இந்த சான்றிதழ் படிப்பைப் படித்திருப்பது தேவையில்லை.
தேர்ச்சி முறை
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படைகளில் தேர்ச்சி முறை இருக்கும். அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வில் டெஸ்ட் ஆப் ரீசனிங், டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்வேஜ், டெஸ்ட் ஆப் நியூமரிக்கல் எபிலிட்டி மற்றும் ஜெனரல் அவேர்னஸ் ஆகிய பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கம்ப்யூட்டர் தொடர்புடைய அப்ஜெக்டிவ் வகைத் தேர்வும் 30 நிமிட அவகாசத்தில் எழுத வேண்டும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர் களுக்கு மட்டும் நேர்காணல் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு 06.02.2011 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னையிலும், நமக்கு அருகிலுள்ள மாநில மையங்களான பெங்களூரு மற்றும் எர்ணாகுளத்திலும் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க முதலில் ரூ.300/ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை பரிந்துரைக்கப்பட்ட சலானின் மூலம் மட்டுமே ஏதாவது ஒரு யூனியன் வங்கிக் கிளையில் மட்டுமே செலுத்த வேண்டும். வேறு எந்த முறையிலும் கட்டணம் செலுத்த முடியாது. இந்தச் சலானை யூனியன் வங்கியின் இணைய தளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெறலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இந்தக் கட்டணம் கிடையாது. இந்தக் கட்டண சலானின் உங்களுக்கான பகுதியைப் பத்திரமாக வைத்திருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விபரங்களைக் குறிப்பிட வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தபின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைக் குறைந்தபட்சம் இரண்டு காப்பிகளாவது எடுக்க வேண்டும். எழுத்துத் தேர்வின் போது மட்டுமே இது தேவைப்படும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கான பிரத்யேகமான ஒரு இமெயில் முகவரி இருப்பதனையும் உறுதி செய்யவும். எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு, நேர்காணலுக்கான அழைப்பு போன்ற பல முக்கிய தகவல்கள் இந்த இமெயில் மூலமாக மட்டுமே உங்களுக்கு அனுப்பப்படும்.
முக்கிய தேதிகள்
கட்டணம் செலுத்த இறுதி நாள்: 16.12.2010
ஆன்லைனில் பதிய இறுதி நாள்: 16.12.2010
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 06.02.2010
இணையதள முகவரி: www.unionbankofindia.co.in
