UPDATED : டிச 09, 2010 12:00 AM
ADDED : டிச 09, 2010 04:55 PM
பொதுத்துறை வங்கிகளில் காலியாகும் கிளார்க் பணியிடங்களை நிரப்ப, பல்வேறு வங்கிகள் தேர்வு நடத்துகின்றன. விளம்பரத்தில் துவங்கி, தேர்வு, நேர்முகத்தேர்வு, பின்னர் முடிவுகளை அறிவிப்பதற்கு ஓராண்டுக்கும் மேல் ஆகிவிடுகிறது. இதனால் வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதைப்போக்க 20 பொதுத்துறை வங்கிளுக்கு ஆட்களை, பொது நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி ராமகிருஷ்ணன் கூறியதாவது: இருபது பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைந்து பொது நுழைவுத்தேர்வு மூலம் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. இதன் மூலம் அடுத்தாண்டு முதல், ஆண்டுதோறும் மூன்று அல்லது நான்கு பொது நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வை வங்கி பணியாளர் தேர்வு மையம் (ஐ.பி.பி.எஸ்.,) நடத்தும்.
இத்தேர்வு மூலம் அதிக மதிப்பெண் எடுத்து தேர்வாகும் விண்ணப்பதாரர்களின் தேர்வு, ஒன்றரை ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இந்த காலத்தில் வங்கிகளில் வரும் காலியிடத்திற்கு நிரப்பப்படுவர். தேர்வு பெற்று ஒன்றரை ஆண்டுக்குள் பணி நியமனம் பெறாதவர்கள், மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.
இந்த தேர்வு கிளார்க் மற்றும் துவக்க நிலை அதிகாரிகளுக்கு மட்டும். இந்த பொது நுழைவுத் தேர்வில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சேராது. இவ்வங்கி ஏற்கனவே தனியாக நடத்தி வரும் தேர்வு தொடரும். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.
