கல்விக்கடன் மறுக்கப்பட்டதால் கேள்விக்குறியான மாணவியின் டாக்டர் கனவு
கல்விக்கடன் மறுக்கப்பட்டதால் கேள்விக்குறியான மாணவியின் டாக்டர் கனவு
UPDATED : டிச 15, 2010 12:00 AM
ADDED : டிச 15, 2010 03:07 PM
வங்கிகள் கல்விக் கடன் வழங்க மறுத்ததால், ஏழை மாணவியின் மருத்துவக் கல்வி கனவு, முதலாம் ஆண்டிலேயே முடிந்து விடும் அவல நிலையில் உள்ளது. சென்னை அமைந்தகரை, முதல் குறுக்குத் தெரு, எம்.எச்., காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். அமைந்தகரையில் உள்ள தனியார் பிரஸ்சில் ஸ்கிரீன் பிரின்டிங் பிரிவில், வேலை செய்து வருகிறார்.
செயின்ட் வின்சென்ட் மெட்ரிக் பள்ளியில் படித்த இவரது மகள் வைஷாலி, பிளஸ் 2வில் 1,200க்கு 1,149 மதிப்பெண் பெற்றுள்ளார். வைஷாலி, தமிழில் 185, ஆங்கிலத்தில் 189, இயற்பியலில் 194, வேதியியலில் 196, உயிரியிலில் 195, கணிதத்தில் 190 மதிப்பெண் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும், வைஷாலி 500க்கு 481 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான கட்ஆப் மதிப்பெண்ணில் 200க்கு 195 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்ற வைஷாலிக்கு, கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் கிடைத்தது. இம்மாணவியின் எம்.பி.பி.எஸ்., கனவு முதலாம் ஆண்டுடன் முடிந்து விடும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து மாணவியின் தந்தை ஸ்ரீதர் கூறியதாவது:
மருத்துவ கவுன்சிலிங்கில் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. தற்போது முதலாம் ஆண்டில் படித்து வருகிறார். மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்கே, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வெளியாட்களிடம் வட்டிக்கு கடனாக பெற்று கல்லூரியில் சேர்த்தேன்.
ஸ்கிரீன் பிரின்டராக பணிபுரியும் நான், வாடகை வீட்டில் ஏழ்மையில் வசிக்கிறேன். என்னிடம் எந்த சொத்தும் இல்லை. என் மகளுக்கு வங்கிக் கடன் வாங்கி படிக்க வைக்கலாம் என்ற நம்பிக்கையில் மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விட்டேன். இரண்டு மாதத்திற்கும் மேலாக பல வங்கிகளில் முயற்சி செய்து பார்த்து விட்டேன். வங்கிக் கடன் தர மறுக்கின்றனர்.
சொத்துப் பத்திரம் இருந்தால் தான் கல்விக் கடன் வழங்க முடியும் என, வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். என் மகளின் மருத்துவக் கல்வி கேள்விக் குறியாகியுள்ளது. இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.
