கல்வி நிறுவன ஆய்வகங்களில் இனி உயிரினங்களுக்கு இடமில்லை
கல்வி நிறுவன ஆய்வகங்களில் இனி உயிரினங்களுக்கு இடமில்லை
UPDATED : பிப் 23, 2011 12:00 AM
ADDED : பிப் 23, 2011 01:57 PM
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் விலங்கியல் ஆய்வகங்களில் இனிமேல் சிறு உயிரினங்களின் நிஜ உடல்கூறு ஆய்வு இருக்காது.
பல நவீன வசதிகள் உள்ள இந்த காலத்தில், பல்கலை மற்றும் கல்லூரிகளில் நேரடி விலங்கியல் ஆய்வுகள் என்ற பெயரில் நடக்கும் உயிர் கொலைகளை தடுக்க வேண்டும் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரைகளை யு.ஜி.சி. அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் இனிமேல் விலங்கியல் ஆய்வகங்களில் தவளை, கரப்பான் பூச்சி மற்றும் எலிகள் போன்ற உயிரினங்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாது.
அதற்கு பதிலாக அவற்றின் உடல் உறுப்பு மற்றும் இயக்க விவரங்களை அறிந்துகொள்ள நேரடி காட்சிப் படங்கள், விரிவான விளக்கப் படங்கள், பழைய ஆய்வு பதிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் - 1972 மற்றும் விலங்கு சித்திரவதை தடுப்பு சட்டம் - 1960௦ ஆகியவற்றை மீறாமல் செயல்பட முடியும் என்று யு.ஜி.சி. அறிவிப்பு கூறுகிறது.
இந்த முடிவை எதிர்க்கும் ஒரு தரப்பார், "யு.ஜி.சி. எடுத்துள்ள இந்த முடிவின் மூலம் உயிரினங்களுடனான மாணவர்களின் நேரடி அனுபவம் தடைபட்டு விடும். உயிரினங்களை நேரடியாக தொடும் அனுபவம் மாணவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும். எவ்வளவோ அரியவகை மற்றும் பலவித உயிரினங்கள் வணிகத்திற்காகவும், உணவுக்காகவும் நாள்தோறும் கணக்கின்றி கொல்லப்படுகையில், மாணவர்களின் அறிவு வளர்ச்சி மற்றும் படிப்பு தேவைகளுக்காக சிலவகை சாதாரண சிறு உயிர்கள் கொல்லப்படுவதால் எந்தவிதமான சுற்றுசூழல் சீர்கேடும் நேர்ந்து விடப்போவதில்லை. எனவே இந்த முடிவு துரதிஷ்டவசமானது" என்கின்றனர்.
இந்த முடிவை எதிர்க்கும் ஒரு தரப்பார், "இன்றைய நவீன யுகத்தில் விலங்கியல் ஆய்வு துறையில் ஏராளமான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. விரிவான விளக்கப்படங்கள், தத்ரூபமான விளக்கங்கள் போன்றவை இன்று நிறைய இருக்கின்றன. மேலும் ஒரு கல்வி நிறுவனம் இதுசம்பந்தமாக சாப்ட்வேர், விளக்கக்காட்சி சி.டி., கணினி அடிப்படையிலான தத்ரூப காட்சி உருவாக்கம் போன்ற வசதிகளை ஒருமுறை செய்துவிட்டால் போதும். அவற்றை மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் மற்றும் நிஜ உயிர்களை கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை" என்கின்றனர்.
