அங்கீகாரமற்ற கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மனு
அங்கீகாரமற்ற கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மனு
UPDATED : பிப் 23, 2011 12:00 AM
ADDED : பிப் 23, 2011 05:55 PM
மதுரை: மதுரையில் அங்கீகாரம் பெறாமல் கல்லூரி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மாணவர்கள் மனு கொடுத்துள்ளனர்.
மதுரை கே.கே.நகரில் ஓ.சி.இ., காலேஜ் ஆப் அனிமேஷன் அண்ட் ஐ.டி., என்ற கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று இவர்கள் பலர் பெற்றோருடன் மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூனில் இக்கல்லூரியில் நாங்கள் மல்டிமீடியா அண்ட் அனிமேஷன் பிரிவில் சேர்ந்தோம். இக்கல்லூரி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை (இக்னோ) மற்றும் கிரீன்வேலி கம்யூனிட்டிவ் கல்லூரியுடன் இணைந்தது என விளம்பரம் செய்ததை நம்பி நாங்கள் சேர்ந்தோம். மூன்றாண்டு படிப்புக்கு ரூ.2.31 லட்சம் செலவாகும் என்று கூறி, ஒரு தவணைக்கு ரூ. 38 ஆயிரம் கட்டினோம். ஆறுதவணை செலுத்த வேண்டும்.
கடந்த டிசம்பரில் தேர்வு நடந்தது. ஆனால் இதுவரை தேர்வு முடிவு தெரியவில்லை. நிர்வாகிகளிடம் கேட்டபோது முடிவு தாமதமாக வரும் என்றனர். கல்விக் கடனுக்கான சான்றிதழ்கள் கேட்டபோது, ‘இது கல்லூரி அல்ல. தொழில் தொடர்பான பயிற்சி நிலையம்’ என்றனர்.
இதுபற்றி நிர்வாகிகளிடம் கேட்டபோது, முறையான பதில்தரவில்லை. பெற்றோர் மீது போலீசில் புகார் தெரிவித்தனர். இந்த விசாரணையின் போது, இக்கல்வி நிறுவனத்துக்கும் இக்னோ பல்கலைக்கும் தொடர்பில்லை என்று கூறிவிட்டனர். இதுபற்றி கேட்டால் எங்களை தாக்குவதுடன், கல்லூரிக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றனர். எனவே கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பெற்றோர்கள் சிலர் கூறுகையில், ‘கல்வி நிறுவனம் மீது புகார் தெரிவித்தால் போலீசார் பதிவு செய்ய மறுக்கின்றனர். எனவே கலெக்டரிடம் புகார் தெரிவிக்க வந்தோம். போலீசார் கல்வி நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளனர். அங்கீகாரம் உள்ளது எனக் கூறி எங்கள் புகாரை பெற மறுக்கின்றனர். இக்னோவில் அங்கீகாரம் பெற்றது என்றனர். இப்போது மனோன்மணீயம் பல்கலையில் அங்கீகாரம் பெற உள்ளோம் என்று குழப்புகின்றனர். பணத்தையும் பெற்று, நேரத்தையும் வீணாக்கிவிட்டனர், என்றனர்.
