பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் ஷூ, பெல்ட் அணியலாம்
பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் ஷூ, பெல்ட் அணியலாம்
UPDATED : பிப் 25, 2011 12:00 AM
ADDED : பிப் 25, 2011 12:25 PM
மதுரை: பிளஸ் 2 தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஷூ, பெல்ட் அணிந்து செல்ல தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு குறித்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், மதுரையில் கல்வி அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். முதன்மை கல்வி அலுவலர் ரஜனிரத்னமாலா தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் சுவாமிநாதன், விஜயன், பாலமுரளி, மெட்ரிக் ஆய்வாளர் ரோஸ்லின்மேரி, மாநகராட்சி பள்ளி அலுவலர் வைத்தியநாதன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்கு பிளஸ்2 தேர்வு தொடர்பாக அறிவுரை வழங்கினார். மாணவர்கள் புத்தகங்களை தனி அறையில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் ஒரே மையத்தில் தேர்வு எழுதும்போது, அனைத்து பள்ளி மாணவர்களையும் கலந்தே தேர்வறையில் அமரச் செய்ய வேண்டும். தேர்வு அறைக்குச் செல்லும் முன் மாணவர்களை சோதனை செய்து அனுப்ப வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் ஷூ, செருப்பு, பெல்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அவற்றை அணிந்து செல்ல தடையில்லை. மையத்தின் முன்பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும். பறக்கும் படையினர் மாணவர்களுக்கு இடையூறின்றி செயல்பட வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர் (அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்) மட்டும், வளாகத்தில் ரவுண்ட் செல்லும்போதும் மொபைலை பயன்படுத்தலாம் என்றிருந்தது. ஆனால் இந்த ஆண்டு கண்காணிப்பாளர் தனது அறைக்குள் மட்டுமே மொபைலை பயன்படுத்த வேண்டும். கண்காணிப்பில் ஈடுபடும்போது பயன்படுத்தக் கூடாது என்பன போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
