‘பிற மொழிப்பாடத்துக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம்’
‘பிற மொழிப்பாடத்துக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம்’
UPDATED : பிப் 26, 2011 12:00 AM
ADDED : பிப் 26, 2011 04:15 PM
சென்னை: மொழி வழிச் சிறுபான்மையினர் தமது தாய்மொழியையும் ஒரு பாடமாகக் கற்க, தமிழ்ப் பாடத்துக்கு நிர்ணயித்திருப்பதைப் போல, குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்படுமென, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் பொதுவான மொழியான தமிழையே பள்ளிகளில் படிக்காமல், மாணவர்கள் கல்லூரி கல்வி கற்று பட்டதாரிகளாக வெளிவரும் நிலையைத் தவிர்க்க, தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக்கப்பட்டு, 2006ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
இதனால், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டு, தமிழகத்தில் வாழ்ந்து வரும் மொழி வழிச் சிறுபான்மையினர், தமது பிள்ளைகள் தங்களது தாய்மொழியைக் கற்க வாய்ப்பில்லை என்று முறையீடு செய்தனர். இதனால், மொழி வழிச் சிறுபான்மையினர் தமது தாய்மொழியை ஒரு பாடமாக கூடுதலாக படித்துக் கொள்ளவும், அதில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் தேவையில்லை என்றும் முடிவெடுத்து, அறிவிக்கப்பட்டது.
குறைந்தபட்ச மதிப்பெண் தேவையில்லை என்றால், மொழி வழிச் சிறுபான்மை மாணவர்கள் தமது தாய்மொழியை படிப்பதில் தேவையான கவனம் செலுத்த மாட்டார்கள் என்றும், இதை மாற்றி அமைக்க வேண்டுமென்றும், அவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இக்கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, மொழி வழிச் சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக் கற்பதோடு, கூடுதலாக உருது, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தமது தாய்மொழியையும் ஒரு பாடமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் தேர்ச்சி பெற, தமிழ்ப் பாடத்துக்கு நிர்ணயித்திருப்பதைப் போல குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
