தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% இடஒதுக்கீடு இல்லை
தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% இடஒதுக்கீடு இல்லை
UPDATED : பிப் 27, 2011 12:00 AM
ADDED : பிப் 27, 2011 12:04 PM
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கப்படும் என்ற முதல்வர் கருணாநிதியின் உத்தரவு ஆசிரியர் நியமனத்தில் அமல்படுத்தப்படவில்லை.
பள்ளிக் கல்வித்துறைக்காக தேர்வு செய்யப்பட உள்ள 6,000 பட்டதாரி ஆசிரியர்களில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கப்படவில்லை. இதனால் தமிழ் வழியில் படித்தவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது. அதில் பேசிய முதல்வர் கருணாநிதி, தமிழ் மொழியை வளர்க்கும் வகையில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமானது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 20% முன்னுரிமை அளிக்கப்படும் என்பதுதான்.
இதற்கான அரசாணை, கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனம் என அறிவித்து சென்னை ஐகோர்ட்டில், லிப்ட் ஆபரேட்டர்களும், ஜெராக்ஸ் ஆபரேட்டர்களும் நியமிக்கப்பட்டனர். தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய பணி நியமனங்கள் நடைபெறவில்லை. டி.என்.பி.எஸ்.சி. மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பல்வேறு பணியிடங்களுக்காக ஆட்கள் தேர்வு நடந்து வருகின்றன. இதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% இடஒதுக்கீடு எந்த பணி நியமனத்திலும் அமல்படுத்தப்படவில்லை.
குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறைக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,000 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் இறுதிகட்ட நிலையை எட்டியுள்ளன. ஓரிரு நாளில் தேர்வுப் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. பள்ளிக் கல்வி முதல் பட்டப் படிப்பு வரை தமிழ் வழியில் படித்திருப்பவர்களுக்கு, அரசு உத்தரவுப்படி வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அதுபோல் எவ்வித பணிகளும் நடக்கவில்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,200 பணியிடங்கள் ஒதுக்காததால், தமிழ் வழியில் படித்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனத்திலும் இதே கதிதான். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறும்போது, "தமிழ் வழியில் நியமனம் செய்வது குறித்து அரசிடம் இருந்து தெளிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வரவில்லை. இரண்டாவது, ஆசிரியர் பணி நியமனப் பணிகள் அரசாணை வெளிவருவதற்கு முன்பே துவங்கி விட்டன. இந்த இரு காரணங்களால் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை இந்த தேர்வில் அமல்படுத்த முடியவில்லை" என்றனர்.
