UPDATED : மார் 03, 2011 12:00 AM
ADDED : மார் 03, 2011 01:39 PM
மதரசாக்களுக்கு தனி வாரியம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று வெளியான செய்திகளை மனிதவள அமைச்சர் கபில்சிபல் மறுத்துள்ளார்.
அத்தகைய முயற்சிக்கு முஸ்லீம் சமூகத்திடமிருந்து சிறியளவிலான ஆதரவே கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் இது சம்பந்தமாக அவர் கூறியதாவது, "தனி மதரசா வாரியம் அமைப்பது தொடர்பாக எந்த செயல்திட்டமும் இல்லை. முஸ்லீம் சமூகம் இதற்கென ஆர்வமாக முன்வராத வரை, எந்த முயற்சியும் எடுக்கப்படாது.
சிறுபான்மை கல்விக்கான கமிஷன் இதுதொடர்பாக ஒரு செயல்திட்டத்தை தயாரித்தது. நான் அதுசம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாடினேன். ஆனால் அவர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மதரசாவிற்கான தனி வாரியம் என்பது சச்சார் கமிட்டியின் பரிந்துரையாகும். மதரசாக்களை நவீனமயமாக்குவதையும், அவற்றின் செயல்பாடுகளையும் ஒரு தனி அமைப்பு கண்காணிக்க வேண்டும். அந்த அமைப்பில் மத அறிஞர்களை விட, கல்வியாளர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று சச்சார் கமிட்டி பரிந்துரைத்தது.
சிறுபான்மை சமூகங்களுக்காக நாட்டில் பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சிறுபான்மை மக்கள் விரும்பும் இடங்களில் உயர்கல்வி நிறுவனங்களை அமைக்கும் திட்டங்கள் எங்களிடம் உள்ளன. அத்தகையதொரு நிலையில்தான் தற்போது எங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன" என்றார்.
ஜமியாத்-உலமா-இ-ஹிந்த் பிரதிநிதிகள் கபில் சிபலை சந்தித்து, இந்தியன் ஸ்கூல் சர்டிபிகேட் எக்சாமிநேஷனுக்கான கவுன்சிலை மாதிரியாக கொண்டு, மதரசாக்களுக்கான ஒரு வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
