UPDATED : மார் 10, 2011 12:00 AM
ADDED : மார் 10, 2011 10:06 AM
"மாணவிகள் வலிமை மிக்கவர்களாக மாற, தகவல் தொழில் நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்&'&', என கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், மதுரை காமராஜ் பல்கலை., துணை வேந்தர் கற்பக குமரவேல் பேசினார்.
கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு விழா கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் அனுசூயா முன்னிலை வகித்தார். முதுகலை பயின்ற 20 மாணவிகளுக்கும், இளநிலை பயின்ற 260 மாணவிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.
துணை வேந்தர் கற்பககுமரவேல், மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது: தொழில்நுட்ப மாற்றத்தில் 21ம் நூற்றாண்டு சவாலை சந்திக்க மாணவிகள் தைரியமாக முன் வர வேண்டும். பெண்களுக்கு கொடுக்கும் கல்வி, குடும்பத்துக்கு கொடுக்கும் கல்வி போன்றது.
இந்தியாவில் 476 பல்கலைக்கழகம் உள்ளது. கல்லூரிகளில் 5.5 லட்சம் பேராசிரியர்களும், உயர்கல்வி பயிலும் மாணவிகள் 116 லட்சம் பேரும் உள்ளனர். இந்நிலையில், 12 சதவீதம் மாணவிகள் தான் கல்லூரிகளில் சேருகின்றனர். மற்றவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. கல்லூரியில் சேர்ந்த மாணவிகள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப புரட்சி திறன்களை ஒவ்வொரு மாணவியும் பெற்றால், வலிமை மிக்க பெண்களாக மாறுவீர்கள். தலைமைப்பண்பு, திட்டமிடுதல், பணியில் ஈடுபாடு, பன்முகத்தன்மை, மென்திறன் வளர்ச்சி இவையெல்லாம் மாணவிகளிடத்தில் இருந்தால் எதிர்காலத்தில் சிறந்து விளங்க முடியும் என்றார்.
