மொபைல் போன் மோகத்தை கொன்று விடு! நோமோபோபியா அதிகரிப்பு
மொபைல் போன் மோகத்தை கொன்று விடு! நோமோபோபியா அதிகரிப்பு
UPDATED : ஜூலை 07, 2025 12:00 AM
ADDED : ஜூலை 07, 2025 08:56 AM

குழந்தைகளிடம் மொபைல்போன் அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான ஆய்வை சென்னை சவீதா பல்கலை பேராசிரியர் அசோக்குமார் வீரமுத்து ஆய்வு மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சிகர உண்மைகள் தெரியவந்தன.
அதில், குறிப்பாக, 10 - 19 வயதுக்குட்பட்டவர்களில், 39 முதல், 44 சதவீதம் பேர் மொபைல்போன் அடிமைத்தனத்தால் ஒருவித மனநோய்க்கு ஆளாகியுள்ளனர். 76 சதவீத குழந்தைகள், தொடர்ந்து மொபைல்போன் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். 66 சதவீதம் பேர், தங்கள் தாயின் அரவணைப்பை விட, மொபைல்போனுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். 81 சதவீதம் பேர், உணவருந்தும் போதும் மொபைல்போன் பார்க்கின்றனர்.
பெற்றோரின் பழக்க வழக்கம் தான் அவர்களை இவ்வழிக்கு கொண்டு செல்கிறது. 54 சதவீத தாய், தந்தையர், குழந்தைகளை அமைதிப்படுத்த, அவர்களுக்கு மொபைல்போன்களை வழங்குகின்றனர்.
மொபைல் போனுக்கு அடிமையாகி இருப்பதால், 76 சதவீத குழந்தைகள் மன அழுத்த அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 சதவீதம் பேர் துாக்கமின்மை, கழுத்து, தலைவலி, உடல் பருமன், கண்பார்வை குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கின்றனர். 93 சதவீத குழந்தைகள், வெளியில் விளையாடுவதை விட, மொபைல்போன் விளையாட்டுகளை அதிகம் விரும்புவதால், அவர்களின் உடல் வலிமை குறைந்து, எலும்பு, தசை வளர்ச்சி பாதிக்கிறது. கவனக்குறைபாடு, கற்றல் திறன், 40 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்படுவதால், சமூக திறன்களில் பின்தங்குகின்றனர் என்கிறது ஆய்வு.
66 சதவீதம் பேருக்கு பாதிப்பு
அலைபேசி மோகத்தின் ஆபத்து குறித்து, அசோக்குமார் வீரமுத்து கூறியதாவது:
கோவிட் காலத்தில் ஆன்லைன் கல்வி, மொபைல்போன் பழக்கத்தை புதிய இயல்பாக நிலை நாட்டியிருக்கிறது. மொபைல்போன் அடிமைத்தனம் என்பது, நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் சமமாகவே காணப்படுகிறது. குறிப்பாக, நம் நாட்டில் இப்பிரச்னை கவலைக்குரியதாக மாறியிருக்கிறது.சிறு குடும்பங்களில், மொபைல்போன் அடிமைத்தனம், 3.4 மடங்கு அதிகரித்திருக்கிறது. உலக சராசரியான 71 சதவீதத்தை விட இது, அதிகம். இந்திய இளைஞர்கள் தினமும், 9 மணி நேரம், மொபைல்போன் பயன்படுத்துகின்றனர்; உலக சராசரி 4.5 மணி நேரம் மட்டுமே. மொபைல் போன்கள் தங்களிடம் இல்லை, அல்லது கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் 'நோமோபோபியா' எனப்படுகிறது; உலகவில் இந்த பாதிப்பு, 66 சதவீதம் பேருக்கு உள்ளது.
எனவே, குழந்தைகளின் மொபைல்போன் பயன்பாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு நிர்ணயிக்க வேண்டும். இரவு நேரங்களில், மொபைல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. பள்ளி, கல்லுாரிகளில், மொபைல்போன் வாயிலாக இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த பயிற்சி வழங்க வேண்டும். குழந்தைகள், வெளியில் சென்று விளையாட அதிக வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
மொபைல் போன், ஏற்படுத்தும் பாதிப்பை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பாதுகாப்பான 'மொபைல் ஆப்'களை மட்டும் அனுமதிக்க வேண்டும். அரசு மற்றும் சமூகம் இணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
மொபைல் போனுக்கு அடிமையாகி இருப்பதால், 76 சதவீத குழந்தைகள் மன அழுத்த அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 சதவீதம் பேர் துாக்கமின்மை, கழுத்து, தலைவலி, உடல் பருமன், கண்பார்வை குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கின்றனர்
தினம் ஒரு மணி நேரம்
மொபைல்போன் பழக்கம், குழந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியிருக்கிறது என்ற அச்சுறுத்தும் ஆய்வு அடிப்படையில், '5 முதல், 17 வயது குழந்தைகள், தினமும், ஒரு மணி நேரத்திற்கு மேல் மொபைல் போனில் விளையாடக்கூடாது' என, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.