தனியார் பள்ளிகள் சட்டத்தின் கீழ் மழலையர் பள்ளிகள்: ஐகோர்ட் தடை
தனியார் பள்ளிகள் சட்டத்தின் கீழ் மழலையர் பள்ளிகள்: ஐகோர்ட் தடை
UPDATED : செப் 19, 2024 12:00 AM
ADDED : செப் 19, 2024 09:09 AM

மதுரை:
தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் மழலையர் பள்ளிகளை கொண்டு வந்ததற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
தமிழ்நாடு மழலையர் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் பொதுச் செயலர் கல்வாரி தியாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:
மழலையர் பள்ளிகளில் ஒன்றரை வயது முதல் ஐந்தரை வயதுள்ள, 1.80 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளை தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
ஆனால், தேசிய கல்விக் கொள்கையின்படி மழலையர் பள்ளிகளை, சமூக நலத்துறையின் கீழ் தான் கொண்டு வர முடியும். 6,000 மழலையர் பள்ளிகளில் 90 சதவீதம் பெண் தொழில் முனைவோரால் நடத்தப்படுகின்றன.
புதிய சட்டப்படி இப்பள்ளிகளை தனிநபர்கள் அல்லது உரிமையாளர்கள் நடத்த தடை விதிப்பதன் வாயிலாக, பல பள்ளிகள் மூடப்படுவதற்கு வழிவகுக்கும். இப்பெண்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
எனவே, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் மழலையர் பள்ளிகளை கொண்டு வந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு:
இவ்விவகாரத்தில் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை அக்., 4க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

