திருவள்ளூர் நகராட்சியில் அறிவுசார் மையம் போட்டி தேர்வுக்கு தயாராவோருக்கு பயன்
திருவள்ளூர் நகராட்சியில் அறிவுசார் மையம் போட்டி தேர்வுக்கு தயாராவோருக்கு பயன்
UPDATED : ஏப் 07, 2025 12:00 AM
ADDED : ஏப் 07, 2025 09:22 AM

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள், போட்டித் தேர்வு எழுத ஆர்வமாக உள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக குடிமைப்பணிகள் தேர்வு, ரயில்வே மற்றும் வங்கி தேர்வாணையம் உட்பட பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் செலவு செய்து, சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெயின் நகரில், நுாலக வசதியுடன் கூடிய அறிவு சார் மையம், 1.97 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, கடந்தாண்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
முதல் மற்றும் இரண்டாம் தளம் என, மொத்தம் 4,800 ச.அடி பரப்பளவில் செயல்படும் இந்த அறிவு சார் மையத்திற்கு, தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கீழ் தளத்தில் உள்ள நுாலகத்தில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தேவையான 8,000 புத்தகங்கள் உள்ளன.
நுாலகத்திற்கு வருவோர் புத்தகங்களை வாசித்து, தேவையான குறிப்பெடுக்க இருக்கை வசதி உள்ளது. மேலும், இணையதள வசதியுடன், 17 கம்ப்யூட்டர்கள் உள்ளன. மாணவர்கள், இவற்றையும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
அதேபோல், போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு பயிற்சி அளிக்க, பெரிய அளவிலான ஸ்மார்ட் டிவி அமைக்கப்பட்டு உள்ளது. 100 பேர் அமரும் வகையில், மாடியில் கூட்ட அரங்கும் உள்ளது. மேலும், நுாலகம் அருகில், குழந்தைகள் விளையாட்டுடன், கல்வி பயிலவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடந்தாண்டு இங்கு பயிற்சி பெற்ற, 15 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பாண்டு ஏராளமானோர் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூரைச் சேர்ந்த எழிலரசன் கூறியதாவது:
போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில், அனைத்து வசதிகளும் இங்குள்ளது. இருப்பினம், பல்வேறு புத்தகங்கள் இருப்பில் இல்லை. போட்டி தேர்வுக்கு வேலை பார்த்துக் கொண்டே பலர் தயாராகி வருகின்றனர். எனவே, இம்மையத்தை இரவு 9:00 மணி வரை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

