அனைத்து மாவட்டங்களிலும் குறள் வார விழா நடத்த முடிவு
அனைத்து மாவட்டங்களிலும் குறள் வார விழா நடத்த முடிவு
UPDATED : ஜன 11, 2026 09:38 PM
ADDED : ஜன 11, 2026 09:44 PM

சென்னை:
தமிழகத்தில், 38 மாவட்டங்களிலும், இம்மாதம் முழுதும் குறள் வார விழா நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழின் பெருமையை, குறளின் அருமையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் 'குறள் வாரம்' கொண்டாடப்படும் என, முதல்வரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இசை நிகழ்ச்சி
அதன்படி, இந்த மாதம் குறள் வாரம் கொண்டாட, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக திருச்சி, தேனி, கடலுார் ஆகிய மாவட்டங்களில் திருக்குறள் நாட்டிய நாடகம், இசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பொது மக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், குறள் ஓவியம், குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடக்க உள்ளன.
கோவை, வேலுார், தஞ்சை, விருதுநகர் மாவட்டங்களில், கல்லுாரி மாணவர்களுக்கான குறள் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், ஓவியம், படத் தொகுப்புப்போட்டிகள் நடக்க உள்ளன.
வினாடி வினா
மதுரை, ஈரோடு, நாமக்கல், திருவாரூர் மாவட்டங்களில், திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம் நடத்தப்படும். சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் மெரினா கடற்கரையிலும், ஜேம்ஸ் வசந்தனின் தமிழோசை நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி நடத்துகிறது.
வரும் 21ம் தேதி திருப்பூரில், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
வரும் 23, 24 தேதிகளில், கன்னியாகுமரியில் குறள் மாணவர் மாநாடு நடக்கும். இதில் தமிழ் திறனறிவுத் தேர்வில் வென்ற, 1,500 மாணவர்கள் பங்கேற்பர்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்வில், குறள் வார விழாவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு வீடியோ, பதாகைகளை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் ராஜாராமன் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

