மத்திய அரசு நிறுத்திய கல்வி நிதி கேட்டு வழக்கு; நுால் வெளியீட்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு
மத்திய அரசு நிறுத்திய கல்வி நிதி கேட்டு வழக்கு; நுால் வெளியீட்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு
UPDATED : மே 18, 2025 12:00 AM
ADDED : மே 18, 2025 06:57 AM

சென்னை :
மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்வி நிதியை வழங்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் எழுதியுள்ள, தேசிய கல்வி 2020 எனும் மதயானை என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.
நுாலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். துணை முதல்வர் உதயநிதி வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது:
ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், கொள்கையை ஒரு போதும் விட்டுத்தர மாட்டோம். புதிய கல்விக் கொள்கை எனும் மத யானையை, தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என அன்றே கருணாநிதி எச்சரித்தார்.
இட ஒதுக்கீடு
அந்த வரியையே தலைப்பாக்கி, மகேஷ் புத்தகம் எழுதியுள்ளார். அனைத்தையும் காவி மயமாக்க வேண்டும். அதற்கு முதலில் கல்வியை காவி மயமாக்க வேண்டும் என்பதற்காக, தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறோம் என்பதை, சமூக நீதி பார்வையுடன், மகேஷ் எழுதியுள்ளார். பா.ஜ., வின் செயல்பாடுகளை பார்த்து தான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று, திட்டவட்டமாக சொல்கிறோம்.
இன்றைய நமது உயர்வுக்கு அடித்தளம் கல்வி தான். நீதிக்கட்சி காலம் முதல் கல்வி உரிமைக்காகவே போராடி வருகிறேம். தேசிய கல்விக்கொள்கை, இடஒதுக்கீட்டை சிதைத்து விடும்.
இட ஒதுக்கீடு இருக்கும் வரை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வி கிடைக்கும். பன்முக பண்பாட்டை, தேசிய கல்விக் கொள்கை தகர்க்கும். கடந்த, 75 ஆண்டுகளாக கட்டமைக் கப்பட்ட ஒருமைப்பாட்டை சிதைத்து, சமஸ்கிருத பண்பாடு உடைய, ஒற்றை தேசியத்தை உருவாக்குவது தான், மத்திய பா.ஜ., அரசின் ஒரே நோக்கம்.
தேசிய கல்விக் கொள்கையால், சமஸ்கிருதம் வளரும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷாவே சொல்லியிருக்கிறார்.
வலியுறுத்தல்
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அழிக்கும் முயற்சி இது. இதைத் தடுக்க ஒரே வழி, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது தான். அதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.
பாடத்திட்டங்களை வகுப்பது மற்றும் கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதில், மாநிலங்களின் விருப்பங்களுக்கு மாறாக, மத்திய அரசு திணிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
மாநில பட்டியலுக்கு மாற்றாவிட்டால், கல்வி என்பது அனைவருக்கும் எட்டாக்கனியாகி விடும். தடுப்புச்சுவரை எழுப்பி எழுப்பி, பலரை கல்விச் சாலைக்கு வெளியே நிறுத்தி விடுகின்றனர். இதை தமிழகம் வந்த போது, பிரதமரிடம் நேரடியாகவே வலியுறுத்தினேன்.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றக்கோரும் நமது போராட்டம் தொடரும். அதற்கு மகேஷின் புத்தகம் துணை நிற்கும்.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேர வேண்டிய நிதியை, தங்களது அரசியலுக்காக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடரும். மாநில உரிமைகளை பெறும் வழக்குகளில் வென்றது போல, இந்த வழக்கிலும் வெல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அங்குசம் பரிசு
முதல்வர் ஸ்டாலினுக்கு, யானையை அடக்கும் அங்குசத்தை, அமைச்சர் மகேஷ் பரிசாக வழங்கினார்.
தேசிய கல்வி கொள்கையே காரணம்
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங்:
இந்தியாவின் கூட்டாட்சி, இறையாண்மையை பாதுகாக்க, அனைவரும் ஒன்றுபட வேண்டும். கல்வி என்பது வலிமையான ஆயுதம். பள்ளிகள் வாயிலாகவே, ஆர்.எஸ்.எஸ்., இளைஞர்களின் மனதில் தங்களது கொள்கைகளை விதைத்தது. தமிழகத்தில் பள்ளிப் படிப்பை, இடையில் நிறுத்துபவர்கள் இல்லை என்ற நிலை இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையால், வட மாநிலங்களில் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு தேசிய கல்விக் கொள்கை தடையாக உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை:
கல்வி வளர்ச்சியால் தான், இந்தியாவின் பொருளாதாரம் உலகின் நான்காவது இடத்தில் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல அம்சங்கள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. இக்கொள்கை உருவாக்கத்தில், தமிழகத்தை உதாரணமாக கொண்டிருக்கலாம்; அதை செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை, மாநில உரிமைகள், தமிழகத்தின் இரு மொழிக் கொள்கைக்கு எதிரானது. ஹிந்தி பேசாத மாநிலங்களில், ஹிந்தியை திணிப்பதையும், ஹிந்துத்துவா கொள்கையையும் நோக்கமாகக் கொண்டது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா:
மாநிலங்களின் கருத்துகளை கேட்காமல், தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வி என்பது அடிப்படை உரிமை. ஆனால், தேசிய கல்விக் கொள்கையில், ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கவர்னரின் அதிகாரம் தொடர்பாக, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வாயிலாக, இந்திய அரசியலில் மிகப்பெரிய தலைவராக, முதல்வர் ஸ்டாலின் உயர்ந்துள்ளார். தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், ஸ்டாலின் உறுதியாக குரல் கொடுத்து வருகிறார்.
அமைச்சர் மகேஷ்:
மும்மொழி கொள்கைக்கு எதிரான முதல்வர் ஸ்டாலினின் குரல், தமிழகத்திற்கானது மட்டுமல்ல, இந்தியா முழுதுக்குமானது. தேசிய கல்விக் கொள்கையை, சங் பரிவார் அமைப்புகள் தான் வடிவமைத்துள்ளன. அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக, தேசிய கல்விக் கொள்கை உள்ளது. கொள்கையில் உறுதியாக இருப்பதால்தான், இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்பின் வெளிப்பாடு இந்த புத்தகம்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.