UPDATED : மே 08, 2025 12:00 AM
ADDED : மே 08, 2025 10:16 AM
கோவை:
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறைக் காலத்தில், எக்காரணத்தை முன்னிலைப்படுத்தியும் பள்ளிக்கு வரும்படி, ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் முகமது காஜா மொய்தீன் கூறியதாவது:
பள்ளிக் கல்வி இயக்குனரின் அறிவுறுத்தல்படி ஏப்.,30ம் தேதி, ஆசிரியர்களுக்கான கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1 முதல் ஜூன் 1 வரை விடுமுறை நாட்களாகும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு பணிகளிலும், பின்னர் 10ம் வகுப்பு தேர்ச்சி பணிகளிலும், மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணியிலும், நான் முதல்வன் திட்டத்தின் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டி பயிற்சிகளிலும் பங்கேற்கின்றனர்.
தேர்வுப் பணிகளிலும், மதிப்பெண் மதிப்பீடு பணிகளிலும் ஓயாமல் உழைத்துள்ள ஆசிரியர்களுக்கு, இப்போது விடுமுறை மிகவும் அவசியமாகும்.
எனவே, விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வருவதற்கான முடிவை, கட்டாயப்படுத்தாமல் ஆசிரியர்களின் விருப்பத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.