மேட் இன் இந்தியாவாக வேண்டும்: காங்., எம்.பி., ராகுல் விருப்பம்
மேட் இன் இந்தியாவாக வேண்டும்: காங்., எம்.பி., ராகுல் விருப்பம்
UPDATED : ஜன 15, 2026 10:19 AM
ADDED : ஜன 15, 2026 10:22 AM
கூடலுார்:
“அனைவர் மொழி, மதம் மதிக்கப்பட வேண்டும்,” என, காங்., எம்.பி., ராகுல் வலியுறுத்தினார்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் புனித தாமஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளி 50வது ஆண்டு பொன்விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி மாணவர்களுடன் இணைந்து ராகுல் பொங்கல் விழா கொண்டாடினார்; அப்போது, தோடர் பழங்குடியினருடன் இணைந்து நடனம் ஆடினார். தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ராகுல் பதில் அளித்தார்.
அதன் பின், ராகுல் பேசியதாவது:
தற்போது நாம் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில் இருக்கிறோம். அதற்கேற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான தகவல்கள் இணையதளங்கள், சமூக வலைதளங்களில் எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்கின்றன. அவற்றை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம் பழக்க வழக்கங்கள், மற்றவர்கள் மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். நாம் வெறுப்பை தவிர்த்து, ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுத்து வாழ வேண்டும். அனைவரின் மதம், மொழி மதிக்கப்பட வேண்டும். அது போன்ற இந்தியாவை உருவாக்குவதே என் நோக்கம்.
நல்ல சமுதாயம் உருவாக மாணவர்கள், இளைஞர்களின் பங்கு முக்கியமானது. கல்வி, நாடு வளர்ச்சி அடையும் வகையில் இருக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் பல பொருட்களில், 'மேட் இன் சைனா' என உள்ளது. அதை, 'மேட் இன் இந்தியா' என மாற்ற வேண்டும். அதற்கேற்ற வகையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும். அதில், மாணவர்களின் பங்கு முக்கியமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், நீலகிரி தொகுதி தி.மு.க., எம்.பி., ராஜா, கூடலுார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கிரிஷ் ஷோடங்கருடன் தி.மு.க., எம்.பி., பேச்சு
புனித தாமஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளி பொன் விழா நிகழ்ச்சியை முடித்து, ஹெலிகாப்டர் வாயிலாக ராகுல் மைசூரு சென்றார். அவரை வழியனுப்பி வைக்கும் நிகழ்விலும் தி.மு.க., எம்.பி., ராஜா பங்கேற்றார்.
ராகுல் சென்றதும், கூடலுாரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ராஜா ஆகிய மூவரும் தனியாக சந்தித்து பேசினர். அப்போது, தி.மு.க., காங்., கூட்டணியில் நெருடல் எதுவும் இன்றி, தொகுதிப் பங்கீட்டை பேசி முடிப்பது குறித்து, மூவரும் ஆலோசித்ததாக கட்சி வட்டாரங்கள் கூறின.

