UPDATED : ஜூலை 13, 2026 05:58 PM
ADDED : ஜூலை 13, 2026 05:59 PM
திருப்பூர்:
கொடுவாய், பெருந்தொழுவு, அரண்மனைப்புதுார் மாநகராட்சி பள்ளி ஆகிய பள்ளிகளில் மகிழ்முற்றம் சிறப்பு செயல்பாடுகள் கடந்த வாரம் துவங்கியது.
ஒவ்வொரு அணிக்கும் பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்ச், வெள்ளை என ஒவ்வொரு வண்ணக் கொடி ஒதுக்கப்பட்டது. ஓட்டுப்பதிவை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசியர்கள் அமைச்சராக பொறுப்பு வழங்கினர்.
பள்ளியின் கல்வி பணியை கவனிக்க கல்வி அமைச்சகம், பாதுகாப்புக்கு, மாணவர் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், தலைமை ஆசிரியர், ஆசிரியர், பள்ளி மேலாண்மைகுழு, பெற்றோர் ஆசிரியர் குழு செயல்பாடுகளை கவனிக்க தகவல் மற்றும் தொடர்பு அமைச்சகம், பள்ளியின் சுற்றுச்சூழலை மேம்படுத்த, பராமரிக்க சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், மருத்துவ முகாம், உடல் நல செயல்பாடுகளை கவனிக்க, சுகாதாரம் மற்றும் துாய்மை அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கல்வி) சித்ரா கூறுகையில், “மாணவர்களிடையே தலைமைத்துவம், குழுப்பணி, ஒழுக்கம், சமூக மனப்பான்மை, ஒற்றுமை, கூட்டுச் செயல்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் பள்ளிகளில், 'மகிழ் முற்றம்' செயல்பாடுகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி, அவர்களை எதிர்காலத்தின் திறமையான தலைவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ள சிறந்த குடிமக்களாகவும் உருவாக்க இதுவொரு வலுவான அடித்தளமாக அமையும்,” என்றார்.
