கடல் வளங்களை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாக்க வேண்டும்: சி.பி.ஆர்., வலியுறுத்தல்
கடல் வளங்களை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாக்க வேண்டும்: சி.பி.ஆர்., வலியுறுத்தல்
UPDATED : செப் 01, 2026 09:05 AM
ADDED : செப் 01, 2026 09:25 AM
கடல் வளங்களை பாதுகாத்து, சரியான மீன்பிடிப்பு முறைகளை பின்பற்றுவதால் நாட்டின் 'நீலப் பொருளாதாரம்' வளர்ச்சி அடையும் என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
லட்சத்தீவின் அகத்தியில் மத்திய மீன்வளத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்தியா தற்போது உலகின் 2வது பெரிய மீன் உற்பத்தியாளராக 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளதுடன், மீன்வளத்துறையால் 3 கோடி மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்கள் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.
இந்திய கடல் உணவு பொருட்கள் 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் கடல் உணவு ஏற்றுமதி 73,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சட்டவிரோத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடிப்பை தடுப்பதுடன், கடல் வளங்களை எதிர்கால தலைமுறைக்கும் பாதுகாக்க வேண்டும்.
மீன்பிடி தொழிலை பாரம்பரிய தொழிலாக மட்டும் பார்க்காமல், தொழில்நுட்பம், அறிவியல், உலகளாவிய சந்தை வாய்ப்புகள் நிறைந்த நவீன தொழிலாக இளைஞர்கள் கருத வேண்டும். மேலும், நாட்டின், பிரத்யேக மீன்வள பொருளாதார மண்டலத்தில் ஆறில் ஒரு பங்கு லட்சத் தீவிலிருந்து கிடைக்கிறது.
இப்பகுதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன்னுக்கும் அதிகமான மீன்வளத்தை பெற முடியும். இதில் 94,000 டன் டூனா மற்றும் அதிக விலை மதிப்புடைய வகை மீன்கள் உள்ளன. ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் அதிக விலை மதிப்புடைய டூனா வகை மீன்கள் கிடைக்கின்றன.
இவ்வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.
