UPDATED : மார் 04, 2026 10:01 PM
ADDED : மார் 04, 2026 10:02 PM
சென்னை:
புதிய தலைமுறை ஆசிரியரும், எழுத்தாளருமான சமஸுக்கு, 2025ம் ஆண்டுக்கான, 'மாயா கோனே' சமூக ஊடகர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் மாயா கோனே. விளிம்புநிலை மக்கள் மத்தியில் செயலாற்றுவோரை அங்கீகரிக்கும் வகையில், இவரது பெயரில், கடந்த 25 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் மூன்று பிரிவுகளின் கீழ், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அமைதிக்கான செயல்பாடு பிரிவில், கேரளத்தின் சதீஷ்குமார், நேபாளத்தின் கட்டல் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சமூகச் செயல்பாடு பிரிவில், மத்திய பிரதேசத்தின் சபோ- முன்னி, மீரா சிங்; சத்தீஸ்கரின் இந்து நேதம்; கேரளத்தின் ஷமீர் பாவா, ராஜஸ்தானின் அமித் குமார் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சமூக ஊடகர் பிரிவில், புதிய தலைமுறை ஆசிரியர் சமஸுக்கு விருது வழங்கப்பட்டது. டில்லியைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஆராதனா கோலி, 'செசி' தலைவர் அனுராதா ஐ.பி.எஸ்., கல்வியாளர் குட்டி ஆகியோர் இணைந்து இந்த விருதுகளை வழங்கினர்.
ஜனநாயகம் மற்றும் சமூக மாற்றத்துக்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாக இதழியலை தொடர்ந்தும், துணிச்சலுடனும் கையாளுவதை அங்கீகரிக்கும் வகையில், சமஸுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக செசி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

