எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்கீடு: அரசுக்கு தி.மு.க., திடீர் ஆதரவு
எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்கீடு: அரசுக்கு தி.மு.க., திடீர் ஆதரவு
UPDATED : ஜூலை 28, 2026 06:45 PM
ADDED : ஜூலை 28, 2026 06:46 PM
புதுச்சேரி:
தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசுக்கு 50 சதவீத 'சீட்' ஒதுக்கீட்டை பெற முதல்வர் எடுக்கும் நடவடிக்கைக்கு தி.மு.க., ஆதரவு அளிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., சீட்டிற்கு அரசு இட ஒதுக்கீட்டு தொடர்பாக சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்ற முதல்வர், அனைத்து தனியார் மருத்துவக் கல்லுாரிகளும், அரசுக்கு 50 சதவீத இடங்களை வழங்க வேண்டும்.
இல்லையெனில், அரசுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கான அரசாணை வெளியிடப்படும் என எச்சரித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை தி.மு.க., வரவேற்கிறது.
மேலும், தி.மு.க., ஆட்சியில் தான், தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, அரசுக்கு 50 சதவீத இடங்கள் வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தி.மு.க., ஆதரவாக இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
