மருத்துவ கல்லுாரி மாணவர்கள் அடிப்படை வசதி இன்றி தவிப்பு
மருத்துவ கல்லுாரி மாணவர்கள் அடிப்படை வசதி இன்றி தவிப்பு
UPDATED : ஜன 10, 2026 08:42 AM
ADDED : ஜன 10, 2026 08:42 AM
கோவை:
கோவை அரசு மருத்துவக்கல்லுாரியும், மருத்துவமனை வளாகமும் 10 கி.மீ. தொலைவில் உள்ளதால், விடுதிகள், போக்குவரத்து வசதி இல்லாமல் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
ரயில் நிலையம் அருகே அரசு மருத்துவமனை 18.5 ஏக்கர் பரப்பிலும், அவிநாசி சாலையில் 70 ஏக்கர் பரப்பில் அரசு மருத்துவக்கல்லுாரியும், செயல்பட்டு வருகிறது. இளநிலை பிரிவில், ஆண்டுக்கு 200 பேர் வீதம் 1000 பேரும், முதுநிலை பிரிவில் 350 பேரும் மருத்துவ படிப்பை படிக்கின்றனர்.
இளநிலை, முதலமாண்டு மாணவர்கள் முழுமையாக மருத்துவக்கல்லுாரியில் மட்டுமே படிக்கவேண்டும். இரண்டாமாண்டு முதல் கல்லுாரியை காட்டிலும் அதிக நேரம் மருத்துவமனையில் நேரடி பயிற்சிகள் அளிக்கப்படும். இதில், நான்கு ஆண்டு முடித்த பின்னர் ஐந்தாமாண்டு மாணவர்கள் (சி.ஆர்.ஆர்.ஐ.,) முழுமையாக மருத்துவமனையில் அதிக நேரம் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். முதுநிலை மூன்று ஆண்டு மாணவர்களும் முழுமையாக மருத்துவமனையிலேயே தங்கி பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.
கோவை அரசு மருத்துவமனையில் முதுநிலை மாணவர்கள், ஜூனியர் ரெசிடெண்ட் (இளநிலை மருத்துவர்கள்) என்ற பிரிவில் தேசிய மருத்துவ கவுன்சிலிக்கு கணக்கு காண்பிக்கப்படுகின்றனர். இவர்களே அவசர நேரங்களில் முதலில் நோயாளிகளை எதிர்கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வார்கள்.
சீனியர் டாக்டர்கள் மேற்பார்வையில் நோயாளிகளுக்கான அனைத்து தேவைகளையும் பெரும்பாலும் கவனித்துக்கொள்பவர்கள் இவர்களே.
தேசிய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின் படி, மருத்துவமனை வளாகத்திற்குள்ளே இவர்களுக்கான விடுதி வசதி இருக்க வேண்டும். ஆனால், கோவை அரசு மருத்துவமனையில், முதுநிலை மாணவர்களுக்கு விடுதி இல்லை.
50 பெண் இளநிலை மருத்துவர்கள் தங்கும் அளவிற்கு ஒரு விடுதி மட்டுமே உள்ளது. தவிர, பஸ் வசதி இன்றி இளநிலை, முதுநிலை மாணவர்கள் மருத்துவமனைக்கும், மருத்துவ கல்லுாரிக்கு தினந்தோறும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில் , 'தேசிய மருத்துவ கவுன்சிலிடம் முதுநிலை மாணவர்களுக்கு (ஜூனியர் ரெசிடெண்ட்) விடுதி உள்ளது என பொய் கணக்கு காண்பிக்கப்படுகிறது. முதுநிலை மாணவர்களுக்கு விடுதி ஏற்படுத்தி கொடுத்தால் மருத்துவமனையில் சிகிச்சை தரமும் மேம்படும். வெளியில் தங்குவதால் உடனடி சிகிச்சைக்கு வர முடிவதில்லை. பஸ் போதுமானதாக இல்லாமல் தவிக்கின்றனர்,' என்றார்.
மாணவர்கள் கூறுகையில், 'மருத்துவமனையில் பயிற்சி, வகுப்புகள் சில நேரம் 11:30 மணிக்கும், சில நேரம் 12:30 மணிக்கும் முடியும். கல்லுாரி வகுப்புகள் 1:30 மணிக்கு துவங்கும். தனியார் பஸ்சில் சிரமப்பட்டு செல்கிறோம். மதிய உணவு நேரம் இல்லாமல், வகுப்புக்கு ஓடி செல்வோம், ' என்றனர்.
டீன் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, ''ஆண்கள் விடுதி, பெண்கள் விடுதி புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டுவதற்கு மருத்துவமனையில் இடம் இல்லை. பொதுப்பணித்துறையுடன் பேசியுள்ளேன்,'' என்றார்.

