UPDATED : பிப் 16, 2026 11:00 PM
ADDED : பிப் 16, 2026 11:03 PM

கடந்த 6 ஆண்டுகளில் நாட்டில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2020 - 21 கல்வியாண்டு முதல் 2025 - 26 கல்வியாண்டு வரையிலான காலத்தில் மருத்துவக் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை 48,563 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் 29,080 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவக் கல்வியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு புதிய ஒப்புதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, 2025 - 26 நிதியாண்டு முதல் 2028 - 29 வரையிலான காலக்கட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது, நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் நிலவும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்குவதும், அத்துடன், மாநிலங்களில் உள்ள மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதும் இதன் இலக்காக அமைந்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல், இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தினார். மேலும், நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

