UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 02:25 PM
புதுடில்லி:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலிங் வழங்க டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லி கல்வி அமைச்சர் அதிஷி சிங், கல்வித் துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள உத்தரவு:
மாணவர்களின் மனநலனைக் காக்க, அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கு கவுன்சிலிங் வழங்க திட்டத்தை தயாரிக்க வேண்டும். கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆலோசகர்கள் மற்றும் மனநல உளவியலாளர்கள் மாணவர்களின் மனநலன் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டும்.
ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதை மாணவருக்கு உணர்த்த வேண்டும். இந்த திட்டத்தின் வாயிலாக ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
மாணவர்கள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். மனநலம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. அதற்கான ஆலோசனை வழங்கப்படாததால் மன அழுத்தப் பிரச்னையுடனேயே மாணவர்கள் வளருகின்றனர்.
எனவே, ஆசிரியர்கள் மற்றும் உளவியலாளர்கள் வாயிலாக குழந்தைகளின் இந்தப் பிரச்சனைகளை கண்டறிந்து, நிவர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.