தேசிய கல்விக் கொள்கையை ஏற்கப்போவதில்லை அமைச்சர் உதயநிதி உறுதி
தேசிய கல்விக் கொள்கையை ஏற்கப்போவதில்லை அமைச்சர் உதயநிதி உறுதி
UPDATED : செப் 11, 2024 12:00 AM
ADDED : செப் 11, 2024 08:52 AM

மதுரை:
தேசிய கல்விக் கொள்கையை ஏற்கப் போவதில்லை என மதுரையில் அமைச்சர் உதயநிதி கூறினார்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலர் தாரேஸ் அகமது, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி.அரவிந்த், கூடுதல் கலெக்டர் மோனிகாராணா, பயிற்சி கலெக்டர் வைஷ்ணவி, எம்.பி.,க்கள் தங்கத்தமிழ்ச்செல்வன், வெங்கடேசன், எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சரிடம், மாற்றுத்திறனாளி இளையராஜா மனு வழங்கினார். சர்வதேச தடகள வீரரான எனக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்'' என்றார். மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுச் சங்க நிர்வாகிகள் பூபதி, மணிகண்டன், சிவகுமார், மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு; பல்நோக்கு மையம் அமைக்க வேண்டும்'' என்றார்.
தேசிய கல்விக்கொள்கை
ஆய்வுக்குப் பின் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்தாண்டு செப்டம்பரில் ஆய்வின்போது நடந்த பணிகள், அவற்றில் தீர்வு கண்டது, தாமதமாக நடக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தேன். அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும்படி அறிவுறுத்தினேன்.
மாணவர்கள் நலன்கருதி தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறியதற்கு முதல்வர் ஏற்கனவே பதிலளித்துவிட்டார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளோம். தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை என பலரும் கூறியதற்கும் முதல்வர் ஏற்கனவே பதிலளித்துவிட்டார்.
இவ்வாறு கூறினார்.