இருபாலர் கல்லுாரியாக மாறியது நந்தனம் அரசு ஆண்கள் கல்லுாரி
இருபாலர் கல்லுாரியாக மாறியது நந்தனம் அரசு ஆண்கள் கல்லுாரி
UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM
ADDED : ஜூன் 17, 2024 09:33 AM
சென்னை:
சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லுாரி, இருபாலர் கல்லுாரியாக மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திக் பிறப்பித்த அரசாணை:
சென்னை, அண்ணா சாலையில் இயங்கி வந்த அரசு கல்லுாரி, மகளிர் மட்டும் படிக்கும் வகையில், 1969ம் ஆண்டு, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லுாரியாக அறிவிக்கப்பட்டது. அதில் இருந்து பிரிக்கப்பட்ட கல்லுாரி, நந்தனம் ஆடவர் கலை கல்லுாரியாக செயல்படுகிறது.
இந்த கல்லுாரி, சென்னை மற்றும் புறநகர் பகுதி மாணவர்களுக்கு, உயர்கல்வி படிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில், நந்தனம் அரசு ஆடவர் கலை கல்லுாரியில், இளநிலை படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், இடைநிற்றலும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நடப்பு கல்வியாண்டில் நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லுாரியை, இருபாலர் கல்லுாரியாக மாற்றப்பட உள்ளது. இனி, நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லுாரி, 'அரசு கலைக் கல்லுாரி, நந்தனம்' என அழைக்கப்படும்.
சென்னைக்கு அருகில் குன்றத்துார், வடநெம்மேலி, பெரும்பாக்கம், திருவொற்றியூர் மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில், அரசு இருபாலர் கல்லுாரிகள் துவக்கப்பட்டு, சிறப்பாக நடக்கும் நிலையில், இந்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.