நீட் தேர்வு, உயர்கல்வி படிப்பதற்கான வழிமுறைகள் அரசு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
நீட் தேர்வு, உயர்கல்வி படிப்பதற்கான வழிமுறைகள் அரசு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
UPDATED : பிப் 27, 2026 02:28 PM
ADDED : பிப் 27, 2026 02:30 PM
பந்தலுார்:
அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு மற்றும் உயர்கல்விக்கு தயாராவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பந்தலுார் அருகே தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில், கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ட்ரன் அமைப்பு இணைந்து, நீட் தேர்வு எழுதுவது மற்றும் உயர்கல்விக்கு தயாராவது குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், “கிராமப்புறங்களில் உள்ளடக்கிய பந்தலூர் மற்றும் கூடலூர் சுற்றுவட்டார பகுதி, மாணவர்கள் தற்போது நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி படித்து வருகின்றனர்.
மாணவர்கள் மேல்நிலைக் கல்வி படிக்கும் போதே, உயர்கல்விக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்,” என்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் பேசுகையில், “நீட் தேர்வில் வெற்றி பெற மேல்நிலை வகுப்பு பாடங்களை, முழுமையாக படித்து அதனை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து, எந்த பதட்டமும் இல்லாமல் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
கூடுதல் மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றால், அரசு கல்லூரிகளில் எளிதாக இடம் கிடைக்கும். அரசு பள்ளிகளில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடும் உள்ளது.
எனவே, நீட் தேர்வு எழுதுவதில் ஏற்படும் பயங்களை போக்கி, மாணவர்கள் தங்களை இப்போதே தயார் படுத்தி கொள்ள வேண்டியது அவசியமாகும்,” என்றார்.
கூடலுார் அரசு கலை கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் மகேஸ்வரன் பேசுகையில், “அரசு கல்லுாரிகளில் அனைத்து பிரிவு பாடங்களும் உள்ள நிலையில், மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல் கல்லூரிகளில் சேர்ந்து படித்து தங்கள் வாழ்வில் உயர முன்வர வேண்டும். நேர மேலாண்மை மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்து, தேர்வு எழுதினால் நிச்சயம் வெற்றி பெற முடியும்,” என்றார்.
தொடர்ந்து மாணவர்களின் நீட் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கவியரசன், தினேஷ்குமார், கல்லூரி சமூக பணியியல் துறை தலைவர் மோகன், ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

