UPDATED : மார் 02, 2026 10:03 AM
ADDED : மார் 02, 2026 10:06 AM
திருப்பூர்:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் இணைய, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.,), 2026 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு மே, 3ம் தேதி நடக்குமென அறிவித்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடக்கவுள்ளது. htttps://nta.ac.in என்ற இணையதளத்தில் தகவல்களை கூடுதல் விபரங்களை அறியலாம்.
தேர்வு குறித்த அறிவிப்பு, பிப்ரவரி, 7ம் தேதியே வெளியானது. அன்றே முதலே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர், 1,700 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ஆயிரம் ரூபாயும், பிற வகுப்பினர், 1,600 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.
'நீட்' தேர்வு அறிவிப்பு ஒரு புறம் இருந்தாலும், பிப்., 9ல் பிளஸ் 2 செய்முறை பொதுத்தேர்வு துவங்கியதால், மாணவ, மாணவியர் அதில் கவனம் செலுத்த துவங்கினர்.
பிப்ரவரி, 14ம் தேதியுடன் செய்முறை தேர்வு முடிந்தது. இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. பாடங்களை விரைவாக படித்து முடித்து, மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருந்தாலும், ஆன்லைன் வாயிலாக மாவட்டத்தில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் மார்ச், 8ம் தேதியுடன் அவகாசம் முடிவடைகிறது. 'நீட்' தேர்வெழுத விரும்புவோர், தேர்வுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்குகின்றனர்.
ஜே.இ.இ., தேர்வு ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஜே.இ.இ., ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.,) ஏப்ரல், 1 - 9 வரை இந்த தேர்வை நடத்தவுள்ளது.
தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

