UPDATED : மே 02, 2026 09:26 PM
ADDED : மே 02, 2026 09:30 PM

சென்னை:
'நீட்' தேர்வு எழுதும் மாணவர்கள், முழுக்கை ஆடைகளை அணியலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
நாடு முழுதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை எனும் என்.டி.ஏ., நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் 552 மையங்களில் நாளை (மே 3) நடக்கிறது.
நாடு முழுதும் 22.79 லட்சம் மாணவ மாணவியர், தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான, மாணவ மாணவியர், தேர்வு எழுதுகின்றனர். தலைநகர் சென்னையில், 43 தேர்வு மையங்களில், 21,000க்கும் அதிகமானோர் தேர்வு எழுத உள்ளனர்.
இந்நிலையில், தேசிய தேர்வுகள் முகமை, தேர்வு அறையில் மாணவ மாணவியர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் அனைவரும், தெளிவான தண்ணீர் பாட்டில்களை கொண்டு வர வேண்டும். நம்பிக்கை சார்ந்த பொருட்கள், ஆடைகளை அணிய அனுமதி உண்டு. ஆனால், சோதனை செய்ய, தேர்வர்கள் முன்கூட்டியே, தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.
அதே போல், மெல்லிய ஆடைகளை, மாணவர்கள் அணியலாம். மேலும், முழுக்கை ஆடைகள், கம்பளி உடைகளை அணிந்து கொள்ளலாம். அந்த மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே வர வேண்டும்.
சாதாரண காலணிகளை அணிந்து வர வேண்டும். மேலும், விளக்கம் பெற, 011 - 40759000, 011 - 69227700 ஆகிய எண்களை, மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
'டெலி கவுன்சிலிங்'
தமிழக அரசின், மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளை 'நீட்' தேர்வு நடக்க உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில், 'நட்புடன் உங்களோடு' திட்டம் வாயிலாக, மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. எனவே, 'டெலி கவுன்சிலிங்' தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் தயங்காமல், 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில், தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
