நிப்ட்- டீ கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி
நிப்ட்- டீ கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி
UPDATED : பிப் 24, 2026 11:30 AM
ADDED : பிப் 24, 2026 11:34 AM
திருப்பூர்:
திருப்பூர் 'நிப்ட் - டீ' கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு, பேஷன் டிசைனிங் தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மாணவர்களை உருவாக்கும் முயற்சியாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டாக இணைந்து, 1997ம் ஆண்டில் முதலிபாளையத்தில், நிப்ட்- டீ ஆடை வடிவமைப்பு கல்லுாரியை துவக்கினர்.
முதலிபாளையம், சிட்கோ வளாகம் அருகே கல்லுாரி இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லுாரியில் பயின்று, தொழில் வல்லுனராகவும் தொழில் முனைவோர்களாகவும் உருவாகி வருகின்றனர்.
பாரதியார் பல்கலை பாடத்திட்டத்தின்படி பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், யு.ஜி.சி. சார்பில் நிப்ட் - டீ கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் விண்ணப்பித்த நிலையில், தீவிர பரிசீலனைக்கு பிறகு, 10 ஆண்டுகளுக்கான தன்னாட்சி அந்தஸ்து கல்லுாரிக்கு கிடைத்துள்ளது.
கல்லுாரி சேர்மன் கோவிந்தராஜு கூறுகையில், “கடந்த 29 ஆண்டுகளாக திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், நிப்ட் - டீ கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, அடல் இன்குபேஷன் மையம், டிசைன் ஸ்டுடியோ என பல்வேறு மத்திய, மாநில அரசு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
கல்லுாரியின் நிர்வாக சிறப்பையும், மாணவர்களின் சாதனைகளையும் பாராட்டி கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த திருப்பூர் பின்னலாடை தொழில் துறைக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது,” என்றார்.

