வருவாய் வழி தேர்வில் தேர்ச்சி பள்ளி மாணவியர் கொண்டாட்டம்
வருவாய் வழி தேர்வில் தேர்ச்சி பள்ளி மாணவியர் கொண்டாட்டம்
UPDATED : மார் 19, 2026 06:54 PM
ADDED : மார் 19, 2026 06:57 PM
ஜலகண்டாபுரம்:
அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத்தொகை பெறுவதற்காக, தேசிய வருவாய் வழி தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுவோருக்கு மாதந்தோறும், 1,000 வீதம், 48 மாதங்களுக்கு, 48,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில், சேலம் மாவட்டத்தில், 355 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். அதில் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் பள்ளி மாணவியர் மட்டும், 26 பேர் தேர்ச்சி பெற்று அசத்தினர். இதனால் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் அதிக மாணவியர் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற அடிப்படையில், தொடர்ந்து, 9ம் முறை, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
மேலும் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தனர். அதனால் தேர்ச்சி பெற்ற மாணவியர், நேற்று வகுப்பறையில், 'கேக்' வெட்டி கொண்டாடினர். அந்த மாணவியர், பயிற்சி அளித்த ஆசிரியர் அருண்கார்த்திகேயனை, தலைமை ஆசிரியை கலா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.
அதே போல் தம்மம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், 4 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களை கெங்கவல்லி வட்டார கல்வி அலுவலர் அலெக்சாண்டர், தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன், நேற்று முன்தினம் பாராட்டினர்.
