UPDATED : ஜன 30, 2025 12:00 AM
ADDED : ஜன 30, 2025 07:41 AM
முதுகுளத்துார்:
முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு ஆங்கில ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் துாரி, இளஞ்செம்பூர், ஆத்திகுளம், கீழக்காஞ்சிரங்குளம், சித்திரங்குடி, ஏனாதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்த சரவணன் 20 நாட்களுக்கு முன்பு திருவாடனை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு ஆங்கில ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இன்னும் அரசு பொதுத் தேர்விற்கு ஒரு மாதம் உள்ள நிலையில் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது.
எனவே கல்வித் துறை அதிகாரிகள் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக ஆங்கில ஆசிரியரை பணியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.