14 மாதம் சம்பளம் இல்லை; யோகா ஆசிரியர்கள் போராட்டம்
14 மாதம் சம்பளம் இல்லை; யோகா ஆசிரியர்கள் போராட்டம்
UPDATED : அக் 22, 2024 12:00 AM
ADDED : அக் 22, 2024 09:02 AM
சென்னை:
ஓராண்டுக்கும் மேலாக சம்பளம் வழங்காததை கண்டித்து, சுகாதார துறையில் பணியாற்றும் யோகா பயிற்சி ஆசிரியர்கள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் முன், தமிழ்நாடு பட்டம், பட்டயம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கம் சார்பில், இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதுபற்றி, சங்கத்தின் பொதுச்செயலர் காசிநாததுரை கூறியதாவது:
கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடக்க, யோகா பயிற்சி அளிப்பதற்காக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், யோகா பயிற்சியாளர்களை 2022ல் மத்திய அரசு நியமித்தது. தமிழகத்தில் மூன்று கட்டமாக 250 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் பணி அமர்த்தப்பட்டோம்.
நாங்கள் தற்காலிக பணியேற்ற ஓராண்டுக்குள், தமிழக அரசு எங்களுக்கு பதில், நேச்சுரோபதி மற்றும் யோகா அறிவியல் படித்தவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்தது. நீதிமன்றம் சென்று தடை பெற்றோம்.
எங்களை வெளியேற்ற, அரசு பல்வேறு நெருக்கடிகளை தந்ததுடன், 14 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலர், ஆயுஷ்மான் இயக்குனர் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் பலன் இல்லை. எங்களின் பணி பாதுகாப்புக்காக வழக்கு தொடர்ந்தோம்.
தற்போது, வழக்கு நிலுவையில் உள்ளதால், சம்பளம் வழங்க முடியாது என்கின்றனர்.
மத்திய அரசின் நிதியை பெற்று, எங்களுக்கு வழங்குவதில் கூட அரசியல் செய்கின்றனர். யோகாவால் பிறரின் மனநலனை பாதுகாக்கும் நாங்கள், பணி செய்தும் ஊதியம் வராததால், மன உளைச்சல் அடைந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.