UPDATED : ஜன 08, 2026 03:48 PM
ADDED : ஜன 08, 2026 03:48 PM
சிதம்பரம்:
சிதம்பரம், மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம், அண்ணாமலை நகரில் உள்ள, மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், சுமார் 300 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுழற்சி முறையில் இரவு , பகல் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட சில செவிலியர்களுக்கு மட்டும், பகல் நேர பணியும், மற்றவர்களுக்கு தொடர்ந்து இரவு நேர பணி தருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அனைவருக்கும் பணியை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

