மறுதேர்வு நடத்த எதிர்ப்பு; போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி
மறுதேர்வு நடத்த எதிர்ப்பு; போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி
UPDATED : டிச 26, 2024 12:00 AM
ADDED : டிச 26, 2024 07:59 PM
பாட்னா:
பீகாரில் பி.பி.எஸ்.சி., தேர்வை மீண்டும் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் (BPSC) சார்பில் கடந்த 13ம் தேதி தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 900 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
தேர்வு விதிமுறைகளை கடைபிடித்து முறையாக நடத்தப்படவில்லை என்று கூறி, தேர்வை ரத்து செய்து அதன் தலைவர் பார்மர் ரவி மனுபாய் அறிவித்தார். மேலும், மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், மறுதேர்வு நடத்தும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று மாலையும் பி.பி.எஸ்.சி., தேர்வை எழுதியவர்கள், சம்பந்தப்பட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மறு தேர்வு நடத்தப்படக் கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், தேர்வர்களை கலைந்து போகுமாறு கூறியுள்ளனர். ஆனால், ஒரு சில மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.