யு.ஜி.சி.,யின் உயர் கல்வி சமத்துவ விதிகளுக்கு எதிர்ப்பு; ஜாதி ரீதியில் பிளவுபடுத்துவதாக வழக்கு
யு.ஜி.சி.,யின் உயர் கல்வி சமத்துவ விதிகளுக்கு எதிர்ப்பு; ஜாதி ரீதியில் பிளவுபடுத்துவதாக வழக்கு
UPDATED : ஜன 29, 2026 09:33 AM
ADDED : ஜன 29, 2026 09:34 AM
யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழுவின் புதிய உயர் கல்வி சமத்துவ விதிகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடு முழுதும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு தொடர்பான புகார்கள் அதிகரித்ததால், உயர் கல்வி சமத்துவத்திற்கு யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு புதிய விதியை கொண்டு வந்தது. இந்த புதிய விதியின் கீழ் அந்தந்த கல்லுாரிகள், பல்கலைகளில் ஜாதி பாகுபாடு தொடர்பான புகார்களை விசாரிக்க சிறப்பு கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது.
குறிப்பாக பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து வரும் புகார்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு உதவிகள் வழங்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடுக்கவும், இடஒதுக்கீடு முறையை வலுப்படுத்தவும் இந்த விதி கொண்டு வரப்பட்டாலும், பொதுப் பிரிவினருக்கு எதிராக உள்ளதாக, நாடு முழுதும் சர்ச்சை எழுந்துள்ளது. இது, பொது பிரிவினருக்கு எதிராக தவறான புகார்கள் அளிக்க வழிவகுக்கும் எனவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை வளாகத்திற்குள் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக, புதிய விதி ஜாதி ரீதியிலான பாகுபாட்டை தான் ஏற்படுத்தும் எனவும் பொது பிரிவு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
யு.ஜி.சி.,யின் புதிய விதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், 'ஜாதி ரீதியிலான பாகுபாடு அவசியம் தடுக்கப்பட வேண்டும். அதே சமயம், ஜாதி ரீதியில் பாதுகாப்பு வரையறுக்கப்படாமல், அனைத்து பிரிவினருக்கும் அளிக்கப்பட வேண்டும்.
எனவே கல்லுாரிகள், பல்கலைகளில் அனைத்து ஜாதியினருக்குமான சமத்துவ குறைதீர் மையங்களை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கும், யு.ஜி.சி.,க்கும் உத்தரவிட வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே யு.ஜி.சி.,யின் புதிய விதிகளை எதிர்த்து டில்லியில் உள்ள அதன் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த முன்வருமாறு உயர் ஜாதி பிரிவு மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யு.ஜி.சி., கொண்டு வந்த புதிய விதிகள், மாணவர்களுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல், ஜாதி ரீதியான பிளவுகளை மேலும் அதிகரிக்கும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் ஜாதி ரீதியாக பிளவுபட்டு நிற்காமல், ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், யு.ஜி.சி.,யின் ஜாதி பாகுபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பியுள்ளனர்.

