மாவட்ட நீதித்துறையில் தற்காலிக நியமனங்களை தவிர்க்க உத்தரவு
மாவட்ட நீதித்துறையில் தற்காலிக நியமனங்களை தவிர்க்க உத்தரவு
UPDATED : ஜூலை 24, 2026 03:18 PM
ADDED : ஜூலை 24, 2026 03:19 PM
சென்னை:
'மாவட்ட நீதித்துறையில், தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமிப்பதை தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு, ஆண்டுதோறும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், மாவட்ட நீதித்துறையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுருக்கெழுத்தர், தட்டச்சர், இளநிலை உதவியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அரசியல் சாசனம் வழங்கியுள்ள சம வாய்ப்பு உரிமையை நீர்த்து போக செய்தால், சட்டவிரோத, முறைகேடான மற்றும் பின்வாசல் நியமனங்களை ஊக்குவித்தது போல் ஆகிவிடும்.
படித்த விண்ணப்பதாரர்களின் உரிமைகள் பாதிக்கப்படும். தற்காலிக நியமனம் தான் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, அதை ஏற்றுக்கொண்டு பணியில் சேர்ந்த நிலையில், தற்போது பணி நிரந்தரம் கோர முடியாது.
தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு, அந்தந்த பணிகளுக்கான தேர்வு நடைமுறையில் பங்கேற்க அனுமதி அளிக்கலாம். கால வரம்பில்லாமல் தற்காலிக நியமனங்களை தொடர அனுமதிக்க முடியாது என்பதால், தற்காலிக நியமனங்களை தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு, ஆண்டுதோறும் தேர்வு நடைமுறைகளை, நீதித்துறை மேற்கொள்ள வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
