பள்ளி நுாலக பாட வேளைகளில் புத்தகங்கள் வாசிக்க உத்தரவு
பள்ளி நுாலக பாட வேளைகளில் புத்தகங்கள் வாசிக்க உத்தரவு
UPDATED : ஜூன் 24, 2026 10:55 AM
ADDED : ஜூன் 24, 2026 10:56 AM
சென்னை:
“தொடக்க பள்ளிகளில், நுாலக பாட வேளைகளில், வாசிப்பு இயக்கத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள, 261 புத்தகங்களை வாசிக்க, மாணவர்களை பழக்க வேண்டும்” என, தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தொடக்கக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்பு இயக்கம் செயல்படுகிறது. இது, மாணவர்களிடம் உரையாடலை தொடங்கவும், சமூக சிந்தனையை துாண்டவும், அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்தவும் பயிற்சி அளிக்கிறது.
இதற்காக, மாணவர்களின் வாசிப்புத் திறனுக்கு ஏற்ப, 'நுழை, நட, ஓடு, பற' என்ற நிலைகளில், தமிழில் 174, ஆங்கிலவழி புத்தகங்கள் 87 என, 261 புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகங்களை, நுாலக பாடவேளைகளில் மாணவர்கள் வாசிக்கவும், அவர்களை கதை சொல்லிகளாகவும், எழுத்தாளர்களாக உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
